ஆலோசனைக் குழுவில் உள்ள "மாலனுக்கே" சாகித்திய அகாடமி விருதா..? வெடித்துக் கிளம்பும் "சந்தேகங்கள்"
சென்னை: மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான மாலன் நாராயணனுக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அகாடமியின் ஆலோசனைக்குழுவிலும் அவரது பெயர் இருப்பது விமர்சனங்களுக்கு வித்திட்டு இருக்கிறது.
பத்திரிகை துறையில் நீண்ட அனுபவம் கொண்ட மாலன் நாராயணன் தற்போது தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து வருகிறார்.
இவர், ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த 'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்' என்ற நாவலுக்கு 2021 ஆம் ஆண்டின் சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சாகித்திய அகாடமி விருது
இந்திய அரசால் எழுத்தாளர்கள், நூல்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக சாகித்திய அகாடமி விருது கருதப்பட்டு வருகிறது. ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த புத்தகங்களுக்கு ஆண்டுதோறும் சாகித்திய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல் மொழி பெயர்ப்பு நூல்களுக்கும் சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதை பெறுபவர்களுக்கு ரூ.50,000 ரொக்கம், சால்வை செப்பு பட்டயம் ஆகியவை வழங்கப்படும்.
மாலன் நாராயணன் தேர்வு
இந்த நிலையில், நேற்று டெல்லியில் நடைபெற்ற சாகித்திய அகாடமியின் நிர்வாகக்குழு கூட்டத்தில் 2021 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கான விருதுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பப்பட்டன. பிராந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம் ஆகிய 22 மொழிகளில் வெளியிடப்பட்ட நூல்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பு விருதுக்கு மாலன் நாராயணன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
சைரஸ் மிஸ்திரியின் நூல்
பிரபல ஆசிரியர் சைரஸ் மிஸ்திரி ஆங்கிலத்தில் எழுதிய 'Chronicle of a Corpse Bearer' என்ற புத்தகத்தைதான் மாலன் தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார். பார்சி மதத்தில் பிணம் தூக்கும் வேலை செய்து வரும் ஏழை மக்களின் வாழ்வியலை பேசும் இந்த நாவல் கடந்த 2015 ஆம் ஆண்டில் சிறந்த ஆங்கில இலக்கிய நாவலுக்கான சாகித்திய அகாடமி விருதை வென்றது. இதைதான் 'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்' என்ற பெயரில் மாலன் எழுதி இருந்தார்.
விருது தேர்வில் சந்தேகம்
இந்த நிலையில், விருது பெறும் மாலன் நாராயணன் சாகித்திய அகாடமியின் தமிழ் பிரிவு ஆலோசனைக்குழுவில் இடம்பெற்று இருப்பது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. சாகித்திய அகாடமியின் இணையதளத்தில் ( https://sahitya-akademi.gov.in/aboutus/tamil.jsp ) இடம்பெற்று இருக்கும் அவரது பெயரை ஸ்க்ரீன்ஷாட் செய்து பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர். சிலர் விருது தேர்வு குறித்த சந்தேகங்களையும் எழுப்பி வருகின்றனர்.