விற்பனை பத்திரம், பட்டா பெற சூப்பர் சான்ஸ்.. ஆவண நகல் ரெடி? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை பாருங்க
சென்னை: வீட்டு வசதி வாரியத்திடமிருந்து வாங்கிய சொத்திற்கு பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், சென்னையில் 3 நாள் முகாம் நடைபெற்று வருகிறது.. இதில் இன்று கடைசி நாள் முகாம் என்பதால், மணலி புதுநகர் திட்டப்பகுதியில் உள்ள ஒதுக்கீடுதாரர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து வீட்டு வசதி வாரியமும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
வாரிய திட்டங்களில் ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டா பெறுவதற்கு வசதியாக, வருவாய் துறையுடன் இணைந்து சிறப்பு முகாம்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில், விற்பனை பத்திரங்கள் உட்பட ஆவணங்களை ஒப்படைத்து, பட்டா பெற்றுக் கொள்ளுமாறு அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டும் வருகிறது.

விற்பனை பத்திரம்
அந்தவகையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் 2 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகரம், மணலி புதுநகர் திட்டப்பகுதியில் உள்ள பகுதி-1, பகுதி-2 மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவற்றால் மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி பொது மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவ்வாறு ஒதுக்கீடு பெற்று முழுத் தொகையையும் செலுத்திய ஒதுக்கீடுதாரர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது.
பட்டா பெற சிறப்பு முகாம்
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் மேலான உத்தரவுக்கு இணங்க மணலி புதுநகர் திட்டப்பகுதியில் உள்ள ஒதுக்கீடுதாரர்களுக்கு வருவாய் துறையிடமிருந்து நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றின் ஒதுக்கீடுதாரர்கள் இச்சிறப்பு முன் முயற்சியை பயன்படுத்தி தாங்கள் வீட்டு வசதி வாரியத்திடமிருந்து மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடமிருந்து வாங்கிய சொத்துக்கு நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு ஏதுவாக தாங்கள் விற்பனை பத்திரங்கள் மற்றும் இதர ஆவணங்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் வருவாய் துறை சார்பாக சிறுவர் மாநகராட்சி பூங்கா, மணலி பகுதி-2ல் மார்ச் 19,20 மற்றும் 21 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 வரையில் நடத்தப்படும் சிறப்பு முகாமில் ஆவணங்களின் நகலினை ஒப்படைத்து பட்டா பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இன்று கடைசி நாள் முகாம்
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு ஒதுக்கீடுதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஏற்கெனவே மேற்காணும் திட்டப்பகுதியில் பட்டா பெறுவதற்கு ஏற்கனவே விண்ணப்பம் அளித்திருந்தால் மீண்டும் விண்ணப்பம் அளிக்க வேண்டாம்" என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
அந்தவகையில், நேற்றும், நேற்று முன்தினமும் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட நிலையில், இன்று கடைசி நாளாக 21ம் தேதி முகாம் நடைபெற உள்ளது.. எனவே, மணலி புதுநகர் திட்டப்பகுதியில் உள்ள ஒதுக்கீடுதாரர்கள், வருவாய் துறையிடமிருந்து பட்டாக்களை இன்று பெற்றுக் கொள்ளலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. .












Click it and Unblock the Notifications