அமித்ஷாவை சந்திக்கிறாரா சரத்குமார்... நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்திய பின்னணி..?
சென்னை: நாளை சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்.
அரசு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக அவர் வருவதாக கூறப்பட்டாலும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசிப்பதற்காகவே அவர் முக்கியமாக தமிழகம் வருகிறார்.

தொடரும் முயற்சி
அமித்ஷாவின் தமிழக வருகையின் போது ரஜினிகாந்த் மற்றும் மு.க.அழகிரி ஆகியோரை அவரை சந்திக்க வைப்பதற்கான முயற்சிகள் இந்த செய்தியை எழுதும் இந்த நிமிடம் வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதனிடையே சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் சரத்குமார் இணைவதாக பேச்சு எழுந்த நிலையில் அதனை அவர் மறுத்திருந்தார்.

தனி வலை
இந்நிலையில் மீண்டும் அதை மையமாக வைத்து பாஜக தரப்பில் விடுக்கப்பட்ட அழைப்புக்கும் சரத்திடம் இருந்து உறுதியான பதில் எதுவும் இல்லை. எலி வலையானாலும் தனி வலையாக இருக்க வேண்டும் என நினைக்கும் சரத்குமார், பாஜகவில் இணைந்து பத்தோடு பதினொன்றாவது நிர்வாகியாக இருக்க விரும்பவில்லை.

லீலா பேலஸ்
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராகவே இருக்க விரும்பும் சரத், பாஜகவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு மட்டும் கியாரண்டி கொடுத்திருக்கிறார். அதனடிப்படையில் நாளை அமித்ஷாவை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. லீலா பேலஸ் விடுதியில் நாளை இரவு சரத் அமித்ஷா சந்திப்பு நிகழும் எனத் தெரிகிறது.

மனக்குமுறல்
சட்டமன்றத் தேர்தல் குறித்து தனது கட்சி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய சரத்குமார், அவர்களிடம் வழக்கம் போல் உணர்ச்சி பொங்க பேசி அவர்களை அனுப்பிவைத்திருக்கிறார். அவர்களும் சரத்குமாரிடம் கொட்ட வேண்டிய தங்கள் மனக்குமுறல்களை கொட்டிச் சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications