உங்கள் விசுவாசம் எங்கே?.. முதல்முறையாக மநீமவுக்கு வாக்களித்தவர்களுக்கு பச்சை துரோகம்.. சனம் ஷெட்டி!
சென்னை: நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் ஒரு வேளை நீங்கள் எல்லாம் வென்றிருந்தால், மக்கள் நீதி மய்யத்திலிருந்து வெளியேறியிருப்பீர்களா என பிக்பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெறும் 2.45 சதவீதம் வாக்குகளையே பெற்றது. இது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை விட குறைவானதாகும்.
இந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தோல்வி குறித்து ஆலோசனை நடத்த கமல்ஹாசன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் வேட்பாளர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

பொறுப்பு
அன்றைய தினம் தேர்தலின் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி நிர்வாகிகள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்யுமாறு கமல்ஹாசன் தெரிவித்ததாக நிர்வாகிகள் கூறுகிறார்கள். அது போல் யார் யாருக்கு தோல்வியில் எத்தனை சதவீதம் பொறுப்பு என்பது போல் பேசினாராம்.

மறுத்தால்
அண்மையில் கட்சியில் இணைந்தவர்களுக்கு கொஞ்சம் பொறுப்பு, உங்களுக்கு முன்னர் கட்சியில் இணைந்தவர்களுக்கு இன்னும் கொஞ்சம் பொறுப்பு கூடுகிறது என்ற கமல்ஹாசன், ராஜினாமா செய்ய மறுத்தால் செய்ய வைக்கப்படுவீர்கள் என்பது போல் பேசியதாக நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

கூண்டோடு ராஜினாமா
இதையடுத்து கமல்ஹாசனுக்கு நெருக்கமாக இருந்த மகேந்திரன், பொன்ராஜ், மயூரா உள்ளிட்டோர் மக்கள் நீதி மய்யம் கட்சி பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார்கள். இவர்களை தொடர்ந்து கோவை மாவட்ட நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்தார்கள்.

ட்விட்டர்
இந்த நிலையில் கமலுடன் இருப்பேன் என கூறிய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, சுற்றுச்சூழல் ஆர்வலர் பத்மப்ரியா ஆகியோர் நேற்று முன் தினம் விலகினார்கள். இதுகுறித்து பிக்பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி பல கேள்விகளை கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பேசுகையில் உங்கள் விசுவாசம் எங்கே?

வாக்கு
ஒரு வேளை நீங்கள் அனைவரும் தேர்தலில் வென்றிருந்தால் இதே போல் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகியிருப்பீர்களா? மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய நீங்கள் எல்லாம் கட்சிக்கும் அதன் தலைவர் கமல்ஹாசனுக்கும் துரோகம் செய்ததோடு முதல்முறையாக உங்கள் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டீர்கள்.

பத்மப்ரியா
சந்தோஷ் பாபு ஐஏஎஸ், பத்மப்ரியா, மகேந்திரன் என அனைவரும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக கூறியுள்ளார்கள். அது என்ன காரணம்? லட்சக்கணக்கான மக்களிடம் தேர்தல் பிரச்சாரத்தை செய்துள்ளீர்கள். கமல்ஹாசன் கட்சியிலிருந்து ஏன் விலகினீர்கள் என அந்த மக்கள் கேட்கிறார்கள் என சனம் ஷெட்டி விளாசி தள்ளியுள்ளார்.












Click it and Unblock the Notifications