சனாதனம் தான் அடிப்படை.. யாராலும் அழிக்க முடியாது.. முடிந்தால் செய்து பாருங்கள்... ஆளுநர் ரவி சவால்
சென்னை: சனாதனம் என்பது மரத்தின் வேர் போன்றது என்றும் வேர் இல்லாமல் மரம் வளர முடியாது, சனாதன தர்மம்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்றும் ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்துள்ளார். சனாதனத்தை அழிக்கப் பார்ப்பது நாட்டை பிளவு படுத்த முயற்சி செய்வதற்கு சமம் என்றும் ஆளுநர் ஆர்என் ரவி கூறியுள்ளார்.
சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. நிலையானதாகவும், மாற்ற முடியாததாகவும் இருப்பதன் அர்த்தமே சனாதனம். சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை எதிர்ப்பது அல்ல, ஒழிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம் என்று உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பேசியிருந்தார். உதயநிதியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் உதயநிதியின் பெயரைக் குறிப்பிடாமல், அவர் பேசிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். சனாதன ஒழிப்பு தொடர்பான பேச்சுக்கு உரிய பதிலடி கொடுக்கும்படி பிரதமர் மோடியும் பாஜக தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்.
உத்தரப் பிரதேசத்தில் சாமியார் ஒருவர் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அறிவித்துள்ளார். டெல்லி, பீகாரில் உதயநிதி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகிய இரண்டு அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும், தமிழக அரசின் நிலை தொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று ஆளுநர் ஆர்.ரவியிடம் விஸ்வ இந்து பரிஷத்தின் தேசிய செயல் தலைவர் அலோக் குமார் கோரிக்கை மனு அளித்தார்.
உதயநிதியின் பேச்சுக்கு பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். அண்ணாநகர் பாலிமர் மடத்தில் சனாதன உற்சவ விழாவின் நிறைவு நாளில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், சிலர் சுயநலத்திற்காக சனாதனத்தை திரித்து பேசுவதாக கூறினார்.
சனாதனம் உலகிற்கு தேவையான ஒன்று என்று கூறிய ஆளுநர் ஆர்என் ரவி, சனாதனத்தை யாராலும் அழிக்க முடியாது என்றார். சனாதன தர்மத்தில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை. சனாதனம் என்பது மரத்தின் வேர் போன்றது என்றும் வேர் இல்லாமல் மரம் வளர முடியாது, சனாதன தர்மம்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்றும் ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்தார். சனாதனம் என்னும் அடிப்படையை உடைக்க முயல்வது நாட்டை பிளவுப்படுத்தும் முயற்சி என்றும் ஆளுநர் ஆர்என் ரவி
தமிழகத்தில் சனாதன தர்மம் வளமோடு இருந்தது. சனாதனத்தின் முக்கிய பகுதியாக தமிழ்நாடு இருந்ததற்கான சான்று உள்ளது என்றும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கல்வெட்டுகளில் சனாதனம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் ஆர்என் ரவி கூறினார். சனாதனத்தை ஒழிப்போம் என்று கூறுபவர்கள், முடிந்தால் முதலில் இந்த கல்வெட்டுகள் அனைத்தையும் அழித்துப் பாருங்கள் என்றும் சவால் விட்டார்.
சனாதனத்தை அழிக்க பலர் முயற்சி செய்துவிட்டனர் ஆனால் யாராலும் அதை அழிக்க முடியவில்லை என்றும் கூறினார் ரவி. அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா என்பது பாரத் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் தமிழக ஆளுநரான ஆர்என் ரவி சனாதன உற்சவ நிறைவு நாள் விழாவில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications