இன்று அமைச்சராகும் உதயநிதி..அடிமைகள் ஓலம், சங்கிகள் ஊளை கேட்கிறது -புதிய சூரியன் என டிஆர்பி வாழ்த்து
சென்னை: திமுக இளைஞரணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்க உள்ளதாகவும், அடிமைகளின் ஓலங்களும் சங்கிகளின் ஊளைகளும் கேட்பதாகவும் திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா தெரிவித்து உள்ளார்.
திமுக ஆட்சியமைத்தது தொடங்கி தற்போது வரை உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப்போவதாக திமுக அமைச்சர்களும், திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளைகள் தெரிவித்து வந்த நிலையில் இதனை உறுதிபடுத்தியது ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு.
அதில், "உதயநிதியை தமிழ்நாடு அமைச்சராக்க சம்மதம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பரிந்துரை செய்து இருந்தார். இதனை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து டிசம்பர் 14 ஆம் தேதி காலை 9:30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது." என தெரிவிக்கப்பட்டது.

சங்கிகளின் ஊளைகள்
இந்த நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி ராஜா, "இருட்டை விரட்டி அடிக்கும் வலிமை சூரியனுக்கே உரியது. தமிழ்நாட்டின் பத்தாண்டு கால இருளை விரட்டிட ஓய்வறியா சூரியனாக உழைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான கழக அரசில் புதிய சூரியனாக ஒளிவிடுகிறார் சின்னவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின். வழக்கம் போல அரசியல் நரிகளான அடிமைகளின் ஓலங்களும் சங்கிகளின் ஊளைகளும் கேட்கின்றன.

விளையாட்டுத் துறை
அவர்கள் அப்படித்தான். நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது அவரது திறமை மிகுந்த செயல்பாடுகளைத்தான். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ஒரு பேரியக்கத்தின் இளைஞரணியைத் தலைமை தாங்கி சிறப்பாக செயல்படுபவர் அமைச்சராகும்போது அந்தத் துறையைச் சார்ந்தவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்படுவது இயல்பு.

எளிமையானவர் உதயநிதி ஸ்டாலின்
விளையாட்டுத் துறையில் ஈடுபடுபவர்கள் இளைஞர்கள். அவர்கள், நட்பு உணர்வுடன் தங்கள் கோரிக்கைகளைத் தெரிவிப்பதற்கு எப்போதும் எளிமையானவராக ஆக இருக்கும் சின்னவர், அவர்களின் கோரிக்கையின் தன்மையை உணர்ந்து, உடனடியாக நிறைவேற்றித் தருவதற்கு மிகப் பொருத்தமானவர்.

தமிழ்நாடு விளையாட்டுத்துறை
மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு விளையாட்டுத் துறையை வரலாறு காணாத வகையில் மேம்படுத்தி இந்திய அளவிலும் உலக அளவிலும் சாதனைகள் படைத்து, பதக்கங்களை வெல்லும் வீரர் - வீராங்கனைகளை உருவாக்குவதில் புதிய முனைப்புடனும் உத்வேகத்துடனும் செயல்பட்டு வருகிறது.

பிரதமரே பாராட்டிய செஸ் ஒலிம்பியாட்
பிரதமர் உள்ளிட்டோர் பாராட்டிய சென்னை செஸ் ஒலிம்பியாட் அதற்கொரு எளிமையான உதாரணம். அதிலும் சின்னவரின் பங்கு முக்கியமானது தொகுதிகள் தோறும் நவீன விளையாட்டரங்கம், சென்னைக்கு அருகே சர்வதேச தரத்திலான விளையாட்டு கிராமம், உலகளாவிய போட்டிகளில் பதக்கம் வெல்வோருக்கு சிறப்புப் பரிசுகள் என விளையாட்டுத் துறையை அணு அணுவாக கவனித்து வளர்த்து வருகிறார் முதல்வர்.

இளைஞர்களுக்கான ஆட்சி
அவருக்கு உற்றதுணையாக சின்னவரைத் தந்திருக்கிறது கழகம். இது விளையாட்டுத் துறையின் பொற்காலம். விளையாட்டுத் துறை மேம்பட்டால் இளைஞர்களின் திறமை மேம்படும். வேலைவாய்ப்புகள் உருவாகும். மாநிலத்தின் திறனால் நாட்டிற்கே பெருமை சேரும். அதை நோக்கிய பெரும் பாய்ச்சலுக்குத் தமிழ்நாடு தயாராகிறது. விமர்சனங்கள் நொறுங்கும். சாதனைகள் பெருகும். இளைஞர்களே இது உங்களுக்கான ஆட்சி. காத்திருங்கள் பல புதிய முன்னெடுப்புகள் விரைவில்.." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications