கருணாநிதி நினைவிடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்
சென்னை: பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; தூய்மை பணிகளை தனியார்மயமாக்குவதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கலைஞர் நினைவிடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் இட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; தூய்மை பணிகளை தனியார்மயமாக்குவதை கண்டித்து கடந்த சில நாட்களாகவே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று திடீரென சென்னை அறிவாலயம் முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை நடத்தினர்.

அப்போது அறிவாலயத்தை முற்றுகையிட முயன்றதால் அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது ஒரு சிலர் கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் உருண்டு போராட்டம் நடத்தினர். ஒரு சிலர் வாகனங்களுக்கு அடியில் சென்று படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும் போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் மதியம் 2 மணியளவில் வேறு சில பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் கருணாநிதி நினைவிடம் முன்பாக குவிந்தனர். கைகளில் பதாகைகளை ஏந்தியபடி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் இட்டனர். மேலும் உடனடியாக எங்களுக்கு பதில் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். வரும் புத்தாண்டுக்கு முன்னதாக எங்களது கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து கருணாநிதி நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கருணாநிதி நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது சில தூய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications