கலைஞர் நினைவிடம் அருகே.. திடீரென குவிந்த தூய்மை பணியாளர்கள்! மெரினாவில் பரபரப்பு
சென்னை: மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடம் அருகே தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
பணி நிரந்தரம், தனியார்மயத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மெரினா கடற்கரையில் திடீரென போராட்டத்தில் இறங்கினர்.

முதலில் சென்னை மெரினா காமராஜர் சாலையில், உழைப்பாளர் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை போலீசார் உடனடியாக கைது செய்தனர். இதனையடுத்து கலைஞர் நினைவிடம் அருகே தூய்மை பணியாளர்களின் மற்றொரு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூண்மை பணியாளர்கள் கைதுக்கு ஒத்துழைக்க மறுத்ததால், போலீசார் அவர்களை குண்டுகட்டாக கைது செய்துள்ளனர்.
போராட்டம் நடக்கும் என்பதை போலீசார் முன்னரே தெரிந்து வைத்திருந்தனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெண் காவலர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். அதேபோல, கைது செய்து அழைத்து செல்ல பேருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், மெரினா சாலையில் எந்த இடத்தில் போராட்டம் நடைபெறும் என்பது உறுதியாக தெரியாததால், போலீசார் திணறினர். மட்டுமல்லாது ஆங்காங்கே சிறு சிறு குழுவாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் இறங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.
5,6 மண்டலத்தில் தூய்மை பணியை அரசு ஏற்று நடத்த வேண்டும். தற்போது தூய்மை பணியை வழங்கும் நிறுவனம் வழங்கும் ஊதியம் குறைந்தபட்சமாக இருக்கிறது என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
துணை மேயர் மகேஷ் குமார் இந்த போராட்டம் குறித்து கூறுகையில், "தூய்மை பணியாளர்களை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்தும் விதம் தவறாக இருக்கிறது. மாநகராட்சி அலுவலகத்தில் எங்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்திருக்கலாம். இதுபோன்ற போராட்டங்களை தவிர்க்க வேண்டும்" என கூறியுள்ளார்.
மதியம் 12.30 மணியளவில் தலைமை செயலகம் முன்பு போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். தங்கள் கோரிக்கைள் ஏற்கப்படவில்லை எனில், சென்னை முழுவதும் போராட்டம் தொடரும் என்றும், தற்போது கைது செய்த மண்டபத்தில் அடைத்து இரவு விடுவித்தாலும் போராட்டத்தை தொடருவோம் எனவும் தூய்மை பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications