ராஜா நீங்களே முன்வரலாமே! திமுக எம்.எல்.ஏ.வை திகைக்க வைத்த சபாநாயகர் அப்பாவு! சட்டமன்றம் ருசிகரம்!
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் சங்கரன்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ராஜாவை சபாநாயகர் அப்பாவு ஒரு நொடி திகைக்க வைத்த நிகழ்வு அங்கிருந்த உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலையை உருவாக்கியது.
சபாநாயகர் தன்னை இப்படி மடக்குவார் என்பதை சிறிதும் எதிர்பார்க்காத ராஜா எம்.எல்.ஏ. அதனை ஒரு வழியாக சிரித்து சமாளித்து அடுத்த கேள்விக்குச் சென்றார்.
சபாநாயகர் அப்பாவுவை பொறுத்தவரை பல நேரங்களில் சட்டமன்ற உறுப்பினர்களிடம் டைமிங் ஆக பேசி அவையில் சிரிப்பொலியை ஏற்படுத்திவிடுவார் என்பது கவனிக்கத்தக்கது.

4-வது நாள் கூட்டம்
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில் நாளை மறுதினம் முடிவடைகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, தனது தொகுதியான சங்கரன்கோவிலில் யாசகம் கேட்போர் மறுவாழ்வு இல்லம் அமைப்பது தொடர்பாக அமைச்சர் கீதாஜீவனுக்கு ராஜா கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கீதாஜீவன், மறுவாழ்வு இல்லங்களை தொடங்க தனியார் தொண்டு நிறுவன அமைப்புகள் முன் வந்தால் அரசு 75% மானியம் வழங்கும் எனக் கூறினார்.

நீங்களே நடத்தலாமே
அப்போதும் அமைதியாகாத சங்கரன்கோவில் திமுக எம்.எல்.ஏ. ராஜா மீண்டும் கட்டிடம் கட்டித் தருவது தொடர்பாக கேள்வியுடன் எழுந்தார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, நீங்களே மறுவாழ்வு இல்லம் தொடங்க முன்வரலாமே என ராஜாவை நோக்கி மெல்லிய குரலில் கூறினார். இதை ராஜா கவனிக்காததால், மீண்டும் மைக்கில் பேசிய சபாநாயகர் அப்பாவு, உறுப்பினர் ராஜாவே மறுவாழ்வு இல்லம் தொடங்க முன்வரலாமே என்ற யோசனையை தெரிவித்தார்.

உறுப்பினர் திகைப்பு
இதைக்கேட்டு திகைத்த ராஜா எம்.எல்.ஏ., 'இல்லை' என சிரித்து சமாளித்து கடகடவென அடுத்த கேள்விக்குச் சென்றுவிட்டார். இந்த நிகழ்வால் சட்டப்பேரவையில் சிரிப்பொலி எழுந்தது. இப்படித்தான் ஜெயலலிதா ஆட்சியின் போது அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த நயினார் நாகேந்திரன், தனது தொகுதிக்குட்பட்ட கோயில் கும்பாபிஷேக விழா குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு கேள்வி நேரத்தின் போது கேள்வி எழுப்பினார்.

கலகலப்பு நிகழ்வு
அப்போது அந்த கும்பாபிஷேக விழாவை நயினார் நாகேந்திரன் நினைத்தால் அவரே நடத்தலாமே என முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கூறினார். இதையடுத்து நயிநார் நாகேந்திரனே அந்த கோயில் விழாவை நடத்தினார். இதனிடையே இன்று நடைபெற்ற இந்த கலகலப்பான நிகழ்வு ஜெயலலிதா ஆட்சியின் போது நடந்த இந்த நிகழ்வை போன்று இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications