அடுத்த திருப்பம்.. கமல்ஹாசனுடன், சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் சந்திப்பு
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுடன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்தித்து கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய இந்திய ஜனநாயக கட்சி யின், நிர்வாகிகளும், கமல்ஹாசனுடன் சந்தித்து கூட்டணி பற்றி ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
அதிமுக கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி இடம்பெற்றிருந்தது. திமுக கூட்டணியில் பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றிருந்தது.

திடீர் முடிவு
இரு கட்சிகளும் தேர்தல் அறிவிப்பு வெளியான நேற்றையதினம் திடீரென தங்களது கூட்டணியிலிருந்து பிரிந்தன. சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி கூட்டணி அமைத்துள்ளதாக சரத்குமார் அறிவித்தார்.

கமல்-சரத்குமார் சந்திப்பு
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 10.30 மணி அளவில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசனுடன், சரத்குமார் சந்தித்து கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

சரத்குமார் கட்சி
இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையில் தனியாக ஒரு கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது . இப்போது அந்த கூட்டணியில் சரத்குமார் மற்றும் பாரிவேந்தர் கட்சிகள் இணைய இருப்பதை இந்த சந்திப்புகள் உறுதி செய்கின்றன .

பல முனை போட்டி
இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகளும் இணையலாம் என்பதால் தமிழகத்தில் பலமுனை அரசியல் போட்டி நிலவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் ஆம் ஆத்மி இணைந்து கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் மேலும் சில கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைவது அந்த கூட்டணியை மேலும் வலிமையாக்கும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications