சரத்குமாரின் சமகவிற்கு போட்டியிட பொது சின்னம் கிடைக்கலையே - ஒளி கொடுக்கும் டார்ச் லைட்
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னமான டார்ச் லைட் சின்னத்திலேயே சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு பொது சின்னம் கிடைக்காத காரணத்தால் டார்ச் லைட் சின்னத்திலேயே தேர்தலை சந்திக்கின்றனர். ராதிகாவும், சரத்குமாரும் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க கமல்ஹாசனுடன் இருவரும் டார்ச் லைட்டை கையில் ஏந்த வேண்டியுள்ளது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக தலைமையில் ஒரு அணியும் திமுக தலைமையில் மற்றொரு அணியும் களம் காண்கின்றனர். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தனி அணி அமைத்துள்ளது. அந்த கூட்டணியில் 10 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
சீமானின் நாம் தமிழர் கட்சி தனியாக களம் காண்கிறது. 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரம் செய்து வருகிறார் சீமான். இதே போல டிடிவி தினகரனின் அமமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக,எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கியுள்ளன. புதிய தமிழகம் கட்சியும் தனியாக களம் காண்கிறது.

கமல் முதல்வர் வேட்பாளர்
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி மற்றும் சுசி கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து தமிழகத்தில் தேர்தலை சந்திக்க உள்ளன. மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட்" சின்னத்தில் சமக உள்ளிட்ட கட்சிகள் 191 இடங்களில் போட்டியிடுகின்றன. கூட்டணியில் 10 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இரட்டை இலையில் சமக
கடந்த 2011, 2016 சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த சமத்துவ மக்கள் கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. சரத்குமார் 2011ஆம் ஆண்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக சட்டசபைக்குள் நுழைந்தார். 2016ஆம் ஆண்டு திருச்செந்தூர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட சரத்குமார் தோல்வியடைந்தார்.

தனி சின்னம் இல்லையே
கடந்த 2007ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பித்தார் சரத்குமார். இதுவரை பல சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்றிருந்தாலும் அதிமுக கூட்டணியில்தான் பலமுறை தேர்தலை சந்தித்துள்ளார் சரத்குமார். தேர்தலுக்கு முன்பாக தனித்து போட்டி தனிச்சின்னம் என்று தொண்டர்கள் மத்தியில் பேசினாலும் கடைசியில் அதிமுக கூட்டணியில்தான் போட்டியிடுவார்.

திடீர் சந்திப்பு
அதிமுக கூட்டணியில் இருந்த போதே சிறையில் இருந்து வந்த சசிகலாவை ராதிகாவும் சரத்குமாரும் சந்தித்து பேசினார்கள். அப்போதே அதிமுக கூட்டணியை விட்டு விலகி அமமுக உடன் சமக இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. டிடிவி தினகரனிடம் இருந்து சரியான சிக்னல் கிடைக்கவில்லை.

கமல் கட்சியுடன் கூட்டணி
சினிமாவில் சீனியராக இருந்தாலும் அரசியலில் தன்னை விட பல ஆண்டுகள் ஜூனியரான கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். அவருக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதிலும் 3 தொகுதிகளை திருப்பி கொடுத்து விட்டு 37 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் சரத்குமார்.

பொதுச்சின்னம் இல்லை
இத்தனை ஆண்டு காலமாக அதிமுக கூட்டணியில் இரட்டை இலையில் போட்டியிட்ட சரத்குமார் முதன்முறையாக தனது கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களை 37 தொகுதிகளில் களம் இறக்கியுள்ளார். பொது சின்னம் கேட்டு வழக்கு போட்டும் கால தாமதம் காரணமாக பொது சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு விட்டது. கடைசியில் வேறு வழியின்றி டார்ச் லைட் சின்னத்திலேயே வேட்பாளர்களை போட்டியிட வைத்துள்ளார் சரத்குமார்.

தொகுதியில் கூட்டணி உள் குத்து
பல தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் சமக வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. விருதுநகரில் போட்டியிட ஆசைப்பட்டார் மநீம கட்சியின் மாவட்ட செயலாளர் அந்த தொகுதி சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தியில் உள்ளனர். சமக வேட்பாளர் இல்லாமலேயே வெறும் டார்ச் லைட் சின்னத்தை மட்டுமே வைத்து வாக்கு கேட்க திட்டமிட்டுள்ளனர் மநீம வேட்பாளர்கள்.

சரத், ராதிகா பிரச்சாரம்
தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று பல மாதங்களாக பேசி வருகிறார் சரத்குமார். அதற்கான திட்டமிடுதல் எதுவும் இல்லாமல் போனதால் கடைசியில் கமல்ஹாசனின் டார்ச் லைட்தான் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களுக்கு ஒளி கொடுக்கப்போகிறது. இத்தனை ஆண்டு காலம் இரட்டை விரலை காண்பித்து இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட சரத்குமார் இனி கையில் டார்ச் ஏந்தப்போகிறார்.












Click it and Unblock the Notifications