பாஜகவில் கட்சிப்பதவியை எதிர்பார்க்கும் ஜீவஜோதி... சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவும் திட்டம்
சென்னை: சட்டப்போராட்டம் மூலம் சரவணபவன் அதிபர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை பெற்றுக்கொடுத்த ஜீவஜோதி அண்மையில் பாஜகவில் இணைந்த நிலையில் அங்கு கட்சிப்பதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
மேலும், வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடவும் அவர் திட்டமிட்டு வருகிறார்.
இதனிடையே கொரோனா பதற்றத்துக்கு பின்னர் தமிழக பாஜக நிர்வாக அமைப்புகளில் ஒரு சில மாற்றம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
சரவணபவன்
மறைந்த சரவணபவன் அதிபர் ராஜகோபாலுக்கு எதிராக நீண்ட நெடிய சட்டப்போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெற்றதன் மூலம் ஊடக வெளிச்சத்திற்கு வந்தவர் இந்த ஜீவஜோதி. ஜெயலலிதாவின் தீவிர அபிமானியாக இருந்த அவர் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டுடன் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். சசிகலா சிறைவாசம் சென்ற பின்னர் அதிமுகவில் நிலவிய குழப்பத்தால் தனது டைலரிங்க் தொழில், மற்றும் உணவகத்தை நடத்துவதில் கவனம் செலுத்தினார்.
பாஜகவில் இணைப்பு
பாஜகவின் டெல்டா பகுதி பிரமுகரான கருப்பு முருகானந்தம் ஜீவஜோதிக்கு தூரத்து உறவினர் என்பதால் அவர் மூலம் அண்மையில் பாஜகவில் இணைந்தார். சரவணபவன் அதிபர் ராஜகோபாலுக்கு (இவர் மறைந்துவிட்டார்)உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்ததை அடுத்து தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கக்கூடும் எனக் கருதி ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் இணைவதற்கு திட்டமிட்டார் ஜீவஜோதி. தொடக்கத்தில் அமமுகவில் இவர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜகவில் ஐக்கியமானார்.
ஜீவஜோதி எதிர்பார்ப்பு
பாஜகவில் வெறுமனே அடிப்படை உறுப்பினராக மட்டும் உள்ள இவர், கட்சியில் பொறுப்பு கொடுத்தால் அதன் மூலம் செயல்படுவதற்கு வசதியாக இருக்கும் எனக் கருதுகிறார். சுமார் 6 மாதங்களுக்கு பிறகு கடந்த மாதம் தான் தமிழக பாஜகவுக்கு முருகன் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்குள் கொரோனா பதற்றம் வந்துவிட்டதால் அவராலும் இன்னும் முழுமையாக செயல்பட முடியாமல் உள்ளார். இந்நிலையில் கொரோனா பதற்றத்துக்கு பின்னர் கட்சியின் அமைப்புகளில் முருகன் மாற்றம் செய்வார் என்றும், அப்போது தனக்கு பதவி பெற்றுவிட வேண்டும் எனவும் நினைக்கிறார் ஜீவஜோதி.
சட்டமன்றத் தேர்தல்
மேலும், வரும் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடவும் ஜீவஜோதி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏனெனில் இது தான் அவரது சொந்த ஊர். இங்கிருந்து தான் சென்னைக்கு ஜீவஜோதி குடும்பம் இடம்பெயர்ந்தது. தற்போது இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அமைச்சர் ஓ.எஸ். மணியன் என்பது குறிப்பிடத்தக்கது.