அதிமுகவில் சாதி மோதலா? நீங்க ஓபிஎஸ் பக்கமா? ஈபிஎஸ் பக்கமா? - சசிகலா சொன்ன பதில் - அங்கதான் ட்விஸ்ட்
சென்னை: அதிமுகவில் சாதி, மதம் பார்க்காமல் அனைவரும் ஒன்று என்ற அடிப்படையிலேயே நகர்வுகள் இருக்கும் என்றும், தான் யார் பக்கமும் இல்லை எனவும் சசிகலா தெரிவித்து உள்ளார்.
அதிமுக மூத்த தலைவராக இருந்த பன்ருட்டி ராமச்சந்திரனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சசிகலா சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "என்னுடைய மூத்த அண்ணனை பார்க்க வந்தேன். அரசியல் விசயமாக கலந்து பேசினேன். என்னை பொருத்தவரை அதிமுகவில் உள்ள அனைவரும் எனக்கு வேண்டியவர்கள். எல்லோரும் சேர்ந்து ஒன்றாய் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே எனது ஆசை." என்றார்.
சாதி ரீதியாக பிளவு ஏற்பட்டிருக்கிறதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சசிகலா, "தலைவர் இந்த கட்சியை தொடங்கும்போது சாதி, மதம் பார்த்ததில்லை. அந்த அடிப்படை கொள்கை இந்த நிமிடம் வரை எங்கள் மனதில் உள்ளது. அதிமுக எல்லோரையும் ஒன்றாக நினைக்கும் இயக்கம். அது மதமாக இருந்தாலும் சரி, சாதியாக இருந்தாலும் சரி. அதன் அடிப்படையிலேயே எனது நகர்வுகள் இருக்கும்.

ஒரே குடும்பம்
அதிமுகவில் உள்ள அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் 50 ஆண்டுகளாக இருந்துள்ளது. அதை நிலைநிறுத்துவதே எனது கடமை. என் 2 தலைவர்களுக்கும் நிச்சயம் நான் அதை செய்வேன். இதெல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும் என்பது எனது திடமான நம்பிக்கை.

அதிமுக இணையும்
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகும் கூட இதுபோல் நடந்துள்ளது. ஒரு காலக்கட்டத்தில் எல்லோரும் ஒன்றாக இணைந்தார்கள். அதேபோல் இப்போதும் நிச்சயம் நிகழும்." என அவர் கூறினார். நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுக இணையும் வாய்ப்பு உள்ளதாக என எழுப்பப்பட்ட கேள்விக்கு, "நிச்சயமாக இருக்கு" என்று அவர் பதிலளித்தார்.

எந்த பக்கமும் இல்லை
ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு பக்கங்களாக அதிமுக உள்ள நிலையில் நீங்கள் யார் பக்கம் இருக்கிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சசிகலா, "நான் எந்தப்பக்கமும் இல்லை. தொண்டர்கள், தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்களோ. அதுதான் எனது செயல்பாடாக இருக்கும். பொதுமக்கள் எங்களை எதிர்பார்க்கிறார்கள். திமுக அரசு தேர்தல் அறிக்கையில் சொன்னதைகூட செய்யவில்லை என மக்கள் சொல்கிறார்கள்.

திமுக அரசு மீது குற்றச்சாட்டு
திமுக அரசு ஏழை எளிய மக்களுக்காக ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் ரத்து செய்வதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். நாங்கள் மீண்டும் வந்து அந்த திட்டங்களை செய்ய வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள். நிச்சயமாக நானும் செய்வேன்." என்றார். உங்கள் தலைமையில் அதிமுக ஒன்றிணையும் வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நிச்சயம் இணையும் என சசிகலா பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications