“டபுள் கேம்” - ஓபிஎஸின் “அடிமடியிலேயே அடி”! தகர்ந்த கணிப்புகள் - டுவிஸ்ட் வைத்த சசிகலா, தினகரன்
சென்னை: முக்குலத்தோர் சாதி அமைப்புகள் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் சசிகலா, தினகரன் ஆகியோர் இன்று அளித்த பேட்டி குழப்பத்தையே ஏற்படுத்தி இருக்கிறது.
ஒற்றைத் தலைமை தீர்மானம் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் தொடர் எதிர்ப்புகள், வழக்குகளை கடந்து ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.
ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.

எடப்பாடி கையில் அதிமுக
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டார். அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு போட்டியாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை நீக்கினார் ஓ.பன்னீர்செல்வம்.

வழக்கு விசாரணை
இருப்பினும் இதற்கு எதிராக தேர்தல் ஆணையம், நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஓ.பன்னீர்செல்வம் அடையாறில் உள்ள தனது இல்லத்தில் அடுத்தடுத்து தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தார். தற்போது அவர் தேனிக்கு சென்று இருக்கிறார்.

சாதி கணக்கு
எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு மோதல் ஏற்பட்டதில் இருந்து கட்சியில் சாதி அடிப்படையில் பிளவு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டு வந்தது. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்துக்களும் பகிரப்பட்டு வந்தன. 100 தேவர் அமைப்புகள் ஒன்றிணைந்து இதையே கோரிக்கையாக முன்வைத்து கடிதம் எழுதின.

தினகரன் பேட்டி
இந்த நிலையில் தேனி சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை எதிர்பாராத விதமாக சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், யாருடனும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்று கூறி இருக்கிறார்.

சசிகலா விளக்கம்
இதேபோல் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா அதிமுகவில் சாதி, மதம் பார்க்காமல் அனைவரும் ஒன்று என்ற அடிப்படையிலேயே நகர்வுகள் இருக்கும் என்று கூறினார். தாங்கள் இபிஎஸ் பக்கம் உள்ளீர்களா அல்லது ஓபிஎஸ் பக்கம் இருக்கிறீர்களா என்று தான் யார் பக்கமும் இல்லை எனவும் சசிகலா தெரிவித்து உள்ளார்.
எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் மன்னார்குடியின் ஆதரவு தனக்கு இருக்கும் என்று எதிர்பார்த்த ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தினகரன், சசிகலா ஆகியோரின் இந்த தெளிவற்ற பேச்சுக்கள் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.












Click it and Unblock the Notifications