ஜெ. நினைவிடத்தில் சசிகலா! கூட்ட நெரிசலை பயன்படுத்தி 20 பேரிடம் பிட்பாக்கெட் திருடர்கள் கைவரிசை
சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா இன்று அஞ்சலி செலுத்தினார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி 20 பேரிடம் ரூ.93,000 பணம் மற்றும் 5 செல்போன்களை பிட்பாக்கெட் திருடர்கள் கொள்ளை அடித்துள்ளார்கள். இது தொடர்பாக வந்த புகாரை அடுத்து அண்ணா சதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையானார். ஆனால் தீவிர அரசியலில் ஈடுபாடு காட்டாமல் ஒதுங்கியே இருந்தார் .
கடந்த ஜனவரி மாதம் விடுதலையான சசிகலா அதன் பிறகு விஸ்வரூபம் எடுப்பார், அதிமுகவை கைப்பற்றுவார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்தது.

அரசியல் ஆர்வம்
ஆனால் சசிகலா திடீரென அரசியலில் ஒதுக்குவதாக அறிவித்து அமைதியாக இருந்தார் . இதனிடையே அதிமுக கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவி ஆட்சியைப் பறிகொடுத்தது. அதன் பிறகு மீண்டும் அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்திய சசிகலா, தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் என பலருக்கும் தொலைபேசியில் அழைத்து பேசினார்.

அதிமுக கட்டுப்பாடு
கொரோனா ஊரடங்கு காரணமாக கட்சி நிர்வாகிகள் தொண்டர்களை சந்திக்க முடியவில்லை என்று கூறினார். இதனிடையே கொரோனா தொற்று குறைந்து இயல்பு நிலை திரும்பியது. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் அண்மையில் நடந்தது. இதில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்த விரும்பிய சசிகலா , அதிமுகவை எப்படியும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டுமென்று காய் நகர்த்தி வருகிறார்.

ஜெயலலிதா சமாதி
அதன் ஒரு பகுதியாக இன்று அண்ணா, எம்.ஜி.ஆர் , ஜெயலலிதாவின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினர். தனது தி.நகர் வீட்டிலிருந்து அதிமுக கொடி கட்டியக் காரில் புறப்பட்ட சசிகலா மெரினாவில் உள்ள நினைவிடத்திற்கு வந்தார். அவருடன் நூற்றுக்கணக்கான தொடர்களும் அங்கு வந்திருந்தனர். ஜெயலலிதாவின் நினைவிடத்தில், கண்கலங்கிய நிலையில் மலர் தூவி மரியாதையைச் செலுத்தினர்.

கொள்ளை
சசிகலா அஞ்சலி செலுத்த வந்த போது அவருடன் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டி னார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்ற 20 பேரிடம் ரூ.93,000 பணம் மற்றும் 5 செல்போன்களை பிட்பாக்கெட் திருடர்கள் கொள்ளை அடித்துள்ளார்கள். இது தொடர்பாக வந்த புகாரை அடுத்து அண்ணா சதுக்கம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications