இதை செய்யாதீங்க.. அ.தி.மு.க பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு.. தொண்டர்களுக்கு சசிகலா பரபரப்பு கடிதம்!
சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா அ.தி.மு.க கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னைக்கு வந்து அதிரடி காட்டினார். ஆனால் சென்னை வந்த சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்து அமைதி கொண்டார்.
உயிரைப்பறித்த தீபாவளி மது விருந்து ... மதுபானம் அருந்திய 3 நண்பர்கள்... அடுத்தடுத்து பலி
கடந்த சில மாதங்களாக அதிமுகவினரை சசிகலா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. தற்போது அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்ற தீவிரமாக இறங்கி விட்டார் சசிகலா.
தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்
சமீபத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.. இந்த நிலையில் விரைவில் தொண்டர்களை சந்திக்க உள்ளதாக சசிகலா கூறியிருக்கிறார். அ.தி.மு.க பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு தொண்டர்களுக்கு சசிகலா எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
அன்பான வேண்டுகோள்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற இந்த பேரியக்கம் நம் புரட்சி தலைவராலும், புரட்சி தலைவியாலும் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு இயக்கம் ஆகும். ஏழை, எளியவர்களின் வாழ்வு பெற உருவாக்கப்பட்ட இயக்கம். அப்படிப்பட்ட ஒரு மாபெரும் இயக்கத்தின் வழி வந்த உயிர் தொண்டர்களுக்கும், என்னை நேசிக்கும் அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்.
தயவு செய்து தவிர்க்க வேண்டும்
என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் என் மேல் உள்ள பிரியத்தால் என்னோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் என்னிடம் மலர்க்கொத்து, பொன்னாடை மற்றும் நினைவு பரிசு வழங்குவதை தயவு செய்து தவிர்க்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
விரைவில் சந்திப்பேன்
அவ்வாறு ஏதேனும் செய்ய விரும்பினால் தாங்கள் வாழுகின்ற இடத்துக்கு அருகில் உள்ள ஏழை, எளியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் வயதானவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதும், தற்போது கொரோனா என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவர்களது வாழ்வாதாரத்தை இழந்து விட்டவர்களுக்கும், மேலும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தங்களால் இயன்ற உதவிகளை செய்தாலே அதுவே தாங்கள் எனக்கு அளிக்கும் ஒரு சிறந்த பரிசாக மனதார ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் அனைவரது ஒற்றுமையும், ஒப்பற்ற அன்பு மட்டுமே எனக்கு வேண்டும். உங்களையெல்லாம் தாங்கள் வாழும் இடத்திற்கே நேரில் வந்து சந்திக்க இருக்கிறேன். இவ்வாறு சசிகலா தெரிவித்துள்ளார்.