திமுகவுக்கு வலைவீசும் பாஜக.. மோடி போடும் புதிய கணக்கு.. காங்கிரஸுக்கு மிக பெரிய ஷாக் வெயிட்டிங்?
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகள், பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. திராவிடக் கட்சிகள் ஆட்சியை இழந்துள்ள நிலையில், விஜய் முதல்வராகப் பதவியேற்றுள்ளார். அதேநேரம் மாநில அளவில் ஏற்பட்ட திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவு, தற்போது டெல்லி நாடாளுமன்ற அரசியலில் ஒரு புதிய பாதைக்கு வழிவகுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, திமுக காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. தவெகவை ஆதரித்த காங்கிரஸ் திமுகவுடனான தனது நீண்டகாலக் கூட்டணியை முறித்துக் கொண்டது. இதனால் ஆத்திரமடைந்த திமுக, காங்கிரஸை 'முதுகில் குத்தியவர்கள்' என்று கடுமையாகச் சாடி வருகிறது.

நிலைமை மோசம்
இதன் உச்சக்கட்டமாக, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்களுடன் தங்களின் திமுக எம்பிக்கள் அமர விரும்பவில்லை என்றும், தங்களுக்குத் தனி இருக்கை வசதி செய்து தர வேண்டும் என்றும் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது
திமுக மற்றும் காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள இந்த விரிசல்தான், தற்போது டெல்லியில் ஆளும் பாஜகவின் எதிர்பார்ப்புகளுக்கு அஸ்திவாரமாக மாறியுள்ளது. அதாவது மத்தியில் ஆளும் என்டிஏ கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் சாதாரணப் பெரும்பான்மை இருந்தாலும், முக்கிய மசோதாக்களை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு (அதாவது 352 இடங்கள்) பெரும்பான்மை இல்லை.
பாஜக போடும் கணக்கு
அண்மையில் நாடாளுமன்றத்தில் நடந்த தொகுதி மறுவரையறை வாக்கெடுப்பின் போது, அவைக்கு வந்திருந்த 528 எம்பிக்களில் 298 பேர் ஆதரவாகவும், 230 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். இதனால் 2/3 பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையை விட 54 இடங்கள் குறைவாகப் பெற்று அந்த மசோதா முடங்கியது. அப்போது திமுகவின் 22 எம்பிக்களும் மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர். தற்போது காங்கிரஸை விட்டு வெளியேறியுள்ள திமுகவின் இந்த 22 எம்பிக்களின் ஆதரவு கிடைத்தால், நாடாளுமன்றத்தில் தங்களின் 'மேஜிக் நம்பர்' கனவை நெருங்க முடியும் என பாஜக வியூகம் வகுக்கிறது.
பாஜகவின் திட்டம் என்னவென்றால், ஒடிசாவின் நவீன் பட்நாயக்கின் பிஜேடி, ஜெகன் ரெட்டியின் ஒய்எஸ் காங்கிரஸ் மற்றும் கேசிஆரின் பிஆர்எஸ் ஆகிய கட்சிகளைப் போல, என்டிஏ கூட்டணியில் நேரடியாக இணையாமல்.. நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் முக்கியத் திட்டங்களுக்கு மட்டும் ஆதரவு தரும் ஒரு நட்பு சக்தியாக திமுகவை மாற்ற நினைப்பதுதான்.
புதிது இல்லை
மேலும், திமுக மற்றும் பாஜகவிற்கு இடையேயான இதுபோன்ற கூட்டணி ஒன்றும் அரசியல் வரலாற்றுக்குப் புதியதல்ல. கடந்த காலத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான என்டிஏ கூட்டணியில் கருணாநிதி தலைமையிலான திமுக மிக முக்கியப் பங்கு வகித்தது. அதன் பின்னரே காங்கிரஸ் கூட்டணிக்கு மாறியது. எனவே, அந்தப் பழைய உறவை மீண்டும் புதுப்பிக்க வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் நம்புகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள புதிய குடியரசுத் தலைவர் தேர்தலிலும் திமுகவின் வாக்குகளைப் பெற இப்போதிருந்தே காய் நகர்த்தப்படுகிறது.
சிக்கல்
அதேநேரம் பாஜக நினைப்பது போல திமுகவுடன் நெருங்குவது அத்தனை சுலபமான காரியமல்ல.. வாஜ்பாய் பாஜக வேறு... மோடி பாஜக வேறு.. மேலும், இப்போது இரண்டு மிக பெரிய சித்தாந்த முட்டுக்கட்டைகள் உள்ளன. முதலில் தொகுதி மறுவரையை.. தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை அழிக்கப் பார்க்கிறது பாஜக என்பதை முன்வைத்துதான் திமுக தனது 2026 தேர்தல் பிரச்சாரத்தையே வடிவமைத்தது. திமுக எம்பிக்கள் கறுப்புத் துணி அணிந்து மசோதா நகல்களை எரித்துப் போராடினர். இந்தச் சூழலில் ஸ்டாலினால் அத்தனை எளிதாகத் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முடியாது.
துணை முதலமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்திற்கு எதிராகத் தொடர்ந்து பேசி, அதனை ஒழிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். ஆனால், சனாதனத்தையே பாஜக முக்கியமானதாகப் பார்க்கிறது. இந்தச் சித்தாந்த முரண்பாட்டைக் கடப்பது கிட்டத்தட்ட முடியாத காரியம்!
என்ன நடக்கும்!
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவிற்குள் ஏற்பட்டுள்ள உள்கட்சிப் பூசல்களும், கட்சி உடையப் போகிறது என்ற தகவல்களும் அதிமுகவைத் தாண்டி பாஜகவைச் சிந்திக்க வைத்துள்ளது. மற்றொருபுறம், தமிழகத்தில் ஆட்சியை இழந்துவிட்டு, மத்தியிலும் எதிர்க்கட்சியாகவே நீடிப்பது ஒரு மாநிலக் கட்சிக்குக் கடுமையான நிதி மற்றும் நிர்வாக நெருக்கடிகளைத் தரும் என்பதால், மத்திய அரசுடன் இணக்கமாகப் போகும் நிலைக்குத் திமுக தள்ளப்படலாம் என்பதும் டெல்லி கணக்கு. ஆனால், இது நடக்குமா எனக் கேட்டால் அவ்வளவு ஈஸியாக நடக்கும் எனச் சொல்லவிட முடியாது என்பதே நிதர்சனமான உண்மை!












Click it and Unblock the Notifications