நீங்க நல்லாயிருக்கணும்.. பாடல் மூலம் அதிமுகவின் புகழை பரப்பியவர் புலமைப்பித்தன்.. சசிகலா உருக்கம்
சென்னை: பிரபல பாடலாசிரியர் கவிஞர் புலமைப்பித்தனின் மறைவையொட்டி தனது இரங்கல் செய்தியில் "நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற என்ற பாடல் மூலம் அதிமுகவின் புகழை பரப்பியவர் புலமைப்பித்தன்" என சசிகலா உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பிரபல திரைப்பட பாடலாசிரியராக இருந்தவர் புலமைப்பித்தன். இவர் சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசின் விருதை 4 முறை பெற்றுள்ளார்.
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பல்வேறு பாடல்களை எழுதியவர் புலமைபித்தன். இவர் கோவை மாவட்டம் பள்ளப்பாளையத்தை சேர்ந்தவர். முதன்முதலில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் குடியிருந்த கோயில் திரைப்படத்திற்கு எம்ஜிஆருக்காக "நான் யார் நான் யார் நீ யார்" என்ற பாடலை எழுதி வரவேற்பை பெற்றார்.

அரசவைக் கவிஞர்
இவர் சட்டமேலவை உறுப்பினர் மற்றும் அரசவைக் கவிஞர் ஆகிய பொறுப்புகளில் இருந்துள்ளார். அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவராகவும் இருந்தவர். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அதிகாலை அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செயல்பாடுகள் குறைவு
வயோதிகம் மற்றும் உடல் உறுப்புகளின் செயல்பாடு குறைவு ஏற்பட்டதால் அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் புலமைப்பித்தன் சிகிச்சை பலனின்றி மறைந்தார். அவரது மறைவுக்கு முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் கட்சித் தலைவர்கள், கவிஞர்கள், திரை பிரபலங்கள் என இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சசிகலாவும் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் "நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற" என பாடலை பாடி அதிமுகவின் புகழை பட்டிதொட்டி எங்கும் கொண்டு செல்ல தோள் கொடுத்தவர் புலமைப்பித்தன். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பாடல்களை எழுதியவர் புலமைப்பித்தன். திராவிட கருத்துகளை தனது பாடல்களின் மூலம் எங்கும் ஒலிக்க செய்தவர் என சசிகலா இரங்கலில் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் சென்னை தனியார் மருத்துவமனையில் இருந்த புலமைப்பித்தனை சசிகலா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர்
புலமைப்பித்தன் அதிமுகவின் அவைத் தலைவராக இருந்தவர். எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜெயலலிதா அணி, ஜானகி அணி இணைய முக்கியப் பங்கு வகித்தவர். ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலா தலைமை பொறுப்பிற்கு வந்ததை வரவேற்றவர். மேலும் அதிமுகவின் பொதுக் குழுவின் ஒப்புதலுக்கு இணங்க பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அவர்தான் இன்னமும் அதிமுகவின் பொதுச் செயலாளர். அவரை நீங்கள் இவர்கள் யார் என கேட்டிருந்தார் புலமைப்பித்தன். மேலும் ஜெயலலிதாவுடன் எல்லா சூழல்களிலும் சசிகலா பயணித்தவர். சசிகலா தலைமை பொறுப்பிற்கு வந்தவுடன் காலில் விழுந்தவர்கள் இன்று அவரை எதிர்த்து வருகிறார்கள். இன்றைய சூழலில் அதிமுகவை வலுப்படுத்த சசிகலாவால் மட்டுமே முடியும் என புலமைப்பித்தன் தெரிவித்திருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா கூறுகையில் இதயக்கனி திரைப்படத்தில் இடம்பெற்ற "நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற" என பாடலை பாடி அதிமுகவின் புகழை பட்டிதொட்டி எங்கும் கொண்டு செல்ல தோள் கொடுத்தவர் புலமைப்பித்தன் என்றார் சசிகலா.

கருணாநிதியின் திரைப்படங்கள்
எம்ஜிஆருக்கு நெருக்கமாக இருந்து கொண்டே கருணாநிதியின் திரைப்படங்களுக்கும் பாடல் எழுதிய துணிச்சல் பெற்றவர் புலமைப்பித்தன். அணி இலக்கணத்தை முதன்மையாகக் கொண்டு அவர் எழுதிய பாடல்களின் பட்டியல் ஏராளம். நாயகன் படத்தில் வரும் நீயொரு காதல் சங்கீதம், இந்த பச்சைக் கிளிக்கொரு செவ்வந்தி பூவில் தொட்டிலை கட்டி வைத்தேன்... உள்ளிட்ட பாடல்களை எழுதியவர். அது போல் அடிமைப்பெண்ணில் ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா பாடலை எழுதியவரும் அவரே. இந்த பாடலை எஸ்பி பாலசுப்பிரமணியன் முதன்முதலாக பாடினார். எம்ஜிஆர் 1984 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். அப்போது அவர் உடல்நலம் பெற அனைத்து மதத்தினரும் பிரார்த்தனை கூட்டங்களை நடத்தினர். அதில் பெரிதும் ஒலிக்கப்பட்ட பாடல் புலமைப்பித்தன் எழுதிய நீங்க நல்லாயிருக்கணும் பாடல் ஆகும். இந்த நிலையில் இன்றைய தினம் புலமைப்பித்தன் சிகிச்சை பலனின்றி மறைந்தார். அவரது மறைவை அடுத்து சசிகலா தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கலில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பாடல்களை எழுதியவர் புலமைப்பித்தன். திராவிட கருத்துகளை தனது பாடல்களின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்க செய்தவர் என சசிகலா இரங்கலில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications