மீளும் போயஸ் கார்டன் "லெகசி".. கிரகப்பிரவேசத்திற்கு நாள் குறித்த சசிகலா.. தொடங்கும் அரசியல் ஆட்டம்!
சென்னை: தமிழக அரசியலுக்கு வருவதற்கு சரியான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் சசிகலா.. போயஸ் கார்டனில் உள்ள தனது புதிய வீட்டில் விரைவில் குடியேற உள்ளார் என்று தகவல்கள் வருகின்றன. புதிய வீட்டில் கிரகப்பிரவேசம் செய்யும் போதே அரசியலிலும் மீண்டும் "கிரகப்பிரவேசம்" மேற்கொள்ள சசிகலா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
அரசியல் என்பது அடையாளம் சார்ந்தது.. ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் ஒரு அடையாளம் இருக்கும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அப்படி ஒரு அடையாளமாக இருந்த வீடுதான் போயஸ் கார்டன் வேதா இல்லம். ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டின் பால்கனியில் வந்து நின்றாலே அதிமுக தொண்டர்கள் இடையே அது பெரிய உணர்ச்சி பெருக்கை ஏற்படுத்தும்.
இதேபோன்ற அடையாளம் தனக்கும் வேண்டும்.. இதேபோல் போயஸ்கார்டனை தனது அரசியல் அடையாளமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் சசிகலாவிற்கும் இருந்தது.
சசிகலா தீவிர அரசியலுக்கு வருவாரா?.. விரைவில் அதிகாரப்பூர்வ வீடியோ ரிலீஸாமே?
போயஸ்கார்டன்
ஆனால் சசிகலா சிறையில் இருந்தே போதே அவசர அவசரமாக இந்த வேதா இல்லம் அரசு நினைவு இல்லமாக மாற்றப்பட்டது. பல கனவுகள் கலைந்தது போல மீண்டும் போயஸ் கார்டனில் வேதா இல்லம் சென்று கையசைக்கும் கனவும் சசிகலாவிற்கு நிறைவேறாமல் போனது. வேதா இல்லத்திற்கு மீண்டும் செல்ல முடியவில்லை என்றாலும், அதே பகுதியில் சசிகலா தனக்காக புதிய மாளிகை ஒன்றை கட்டி வருகிறார்.. தனது அரசியல் பயணத்திற்கான கனவு மாளிகை அது!
எங்கே?
போயஸ்கார்டனில் வேதா நிலையத்திற்கு எதிரேதான் இந்த வீடு கட்டப்பட்டு வருகிறது. அப்படியே வேதா இல்லம் போலவே இந்த வீடு அச்சு அசலாக கட்டப்படுகிறது. போயஸ் கார்டன் பகுதியின் லெகசியை தன்வசப்படுத்தும் முடிவில் சசிகலா இந்த வீட்டை பார்த்து பார்த்து கட்டி வருகிறார். ஜெயிலில் இருந்த போதே இந்த வீடு எப்படி இருக்க வேண்டும், என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, முறையாக கட்டப்பட்டுள்ளது.
தேர்தல்
சிறையில் இருந்து வந்த பின் அரசியலில் இருந்து ஒதுங்கினாலும் கூட சசிகலா.. தனது ஆன்மீக பயணங்களுக்கு இடையில் இந்த வீட்டிற்கும் ஒருமுறை விசிட் அடித்தார். முழு கட்டுமானம் முடிந்து இன்டீரியர்ஸ் வேலைகள் கடைசி கட்டமாக நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த வீட்டில் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் சசிகலா இரவோடு இரவாக விசிட் அடித்தார். அங்கேயே 20 நிமிடங்கள் இருந்துவிட்டு, பின் சாலைக்கு வந்து வெளியில் இருந்தும் வீட்டை பார்த்து இருக்கிறார்.
பூஜை
அதற்கு மறுநாள்தான் போயஸ் கார்டனில் வேதா நிலையம் அருகே இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்றார். இது ஜெயலலிதா வழக்கமாக வணங்கும் விநாயகர் கோவில். சசிகலாவிற்கும் பிடித்தமான கோவில். சசிகலா சென்ற பொது கோவில் பூசாரி அந்த நேரத்தில் இல்லாததால் பூசாரி வந்து, பூஜை நடக்கும் வரை சசிகலா கோவிலுக்கு உள்ளேயே தியானம் செய்தார். இப்படி போயஸ் கார்டன்.. அந்த சாலை.. வீட்டோடு நெருங்கிய உணர்வுபூர்வமாக தொடர்பு கொண்ட சசிகலா மீண்டும் அதே பகுதியில் குடியேற உள்ளார்.
எப்போது
கொரோனா பரவல் குறைந்தவுடன் ஜூன் - ஜூலை மாதங்களில் சசிகலா இங்கு குடியேற வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். கொரோனாவிற்கு பின் வருவேன் என்று சசிகலா கூறியது இதை மனதில் வைத்துத்தானாம். கொரோனா பரவல் குறைந்தும் சசி வீடு மாறுவார். இந்த வீடு தனக்கு புதிய பலத்தை கொடுக்கும், புதிய வாய்ப்புகளை கொடுக்கும், இழந்தவை அனைத்தும் மீண்டும் கிடைக்கும் என்று சசிகலா நம்புகிறாராம். ஆன்மிகம் மீது நம்பிக்கை உள்ள சசிகலா.. இந்த புதிய வீடு தனக்கு அனுகூலத்தை கொடுக்கும் என்று தீவிரமாக நம்புகிறாராம்.
வாஸ்து
அதற்கு ஏற்றபடிதான் வாஸ்து பார்த்து வீட்டை செதுக்கி இருக்கிறார்கள். ஜூலைக்குள் இங்கு குடியேறிவிட்டு, அங்கிருந்து தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை சசிகலா வெளியிடுவார் என்கிறார்கள். ஜூன் - ஜூலையில் தேதியை குறிக்க உள்ளனராம். அங்க போன அப்பறம் எல்லாம் மாறும்.. எனக்கு நம்பிக்கை இருக்கு.. என்று சசிகலா இளவரசியிடம் கூறியுள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த அளவிற்கு புதிய வீடு மாற்றத்தை சசிகலா உணர்வு பூர்வமாக நம்புகிறாராம்.
நம்பிக்கை
இந்த புதிய வீட்டில் இருந்துதான் சசிகலாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் என்றும் கூறுகிறார்கள். அதுவரை நிர்வாகிகளிடம் பேசுவது, எம்எல்ஏக்களை சந்திப்பு உள்ளிட்ட விஷயங்களை ரகசியமாக சசிகலா நடத்துவார் என்கிறார்கள். ஜெயலலிதா எப்படி போயஸ் கார்டனில் இருந்து கொண்டு தமிழக அரசியலை, அதிமுகவை தன் கையில் வைத்து இருந்தாரோ அதேபோல் தானும் மாற வேண்டும், அதிமுகவை கட்டுப்படுத்த வேண்டும் என்றுதான் சசிகலா முழுவீச்சில் புதிய வீடு மாறும் திட்டத்தில் இருக்கிறாராம்!