சசிகலா வருகை.. நெருக்கடி கூடுகிறது.. தொடர் அதிர்ச்சியில் அமமுகவினர்! என்ன ஆகும்?
சென்னை: சசிகலா நாளை சென்னை வரும் போது போது சென்னையில் பேரணி நடக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனிடையே போலீசார் பேரணிக்கு அனுமதி கேட்டு அனுப்பிய மனுவை திருப்பி அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
Recommended Video
சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலா விடுதலையாகி பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி உள்ளார்.
நாளை சசிகலா தமிழகத்திற்கு வர உள்ளார்.. சசிகலா தமிழகத்திற்கு வரும் போது அமமுகவினர் சார்பில் தமிழக எல்லையான ஓசூரில் இருந்து பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
12 இடங்களில் பேரணி
சசிகலா வருகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பேரணி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை போரூரில் தொடங்கி மெரினா, காமராஜர் சாலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் வரை சுமார் 12 இடங்களில் பேரணி நடத்த அமமுக கட்சியினர் திட்டமிட்டுள்ளார்கள்.
காவல் ஆணையரிடம் மனு
ஆனால் சென்னையில் கொரோனா பரவல் காரணமாக பேரணி, போராட்டம் போன்றவை அனுமதியின்றி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் பேரணி நடத்த அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. இதற்கிடையே பேரணி நடத்த அனுமதி கேட்டு அமமுக சார்பில் காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டதாகவும் அந்தமனுவை பரிசீலித்து முடிவு தெரிவிப்பதாக காவல் ஆணையர் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
டிஜிபியிடம் புகார்
இந்நிலையில், சசிகலா சிறையில் இருந்து வெளிவந்தவுடன் அவரது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியது தொடர்பாக அதிமுக அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார் அளித்து, சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கூறியுள்ளார்கள். இந்த சூழலில் சசிகலா தமிழகத்திற்கு வரும்போது அதிமுக கொடியை பயன்படுத்தலாம் என்ற தகவல்கள் உலா வருகின்றன. அமமுகவினரும் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
பேரணி நடக்குமா?
இதற்கிடையே, பேரணி நடத்த அனுமதி கேட்டு மனு அளித்த நிலையில், மனுவில் சரியான தகவல்கள் இல்லை என்று கூறி சென்னை காவல் ஆணையர் திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் நாளை சசிகலாவை வரவேற்று போரூரில் தொடங்கி மெரினா, காமராஜர் சாலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் வரை சுமார் 12 இடங்களில் பேரணி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பேரணிக்கு தடை விதிக்கப்பட்டால் தடையை மீறி நடக்கலாம் என்று சொல்லப்படுகிறது. நாளை சசிகலா சென்னை வரும் போது பெரிய அளவில் அமமுகவினர் திரள்வார்கள் என்பதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.