பச்சை நிற சேலை கட்டி ராகு காலத்திற்கு முன் சென்னைக்கு கிளம்பிய சசிகலா - நேரம் நல்ல நேரமா?
சென்னை: பெங்களூரூவில் நான்கு ஆண்டு சிறை தண்டனை காலம் முடிந்து சென்னை திரும்பும் சசிகலா, பச்சை நிற சேலை கட்டி ராகு காலத்திற்கு முன்பாக நல்ல நேரத்தில் புறப்பட்டுள்ளார். அவருக்கு ராகு திசை நடப்பதால் ராகு காலத்திற்கு முன்பாகவே கிளம்பி விட்டார். இனி எல்லாம் அவருக்கு நல்ல நேரம்தான் என்கின்றனர் ஜோதிடர்கள்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து விடுதலையான இளவரசியும் சசிகலாவுடன் சென்னை திரும்புகிறார். டிடிவி தினகரன், ஜெய் ஆனந்த் உள்ளிட்டோரும் சசிகலாவை காரில் அழைத்து வருகின்றனர்.
சசிகலாவின் தமிழகம் வருகையை அமமுகவினர் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். ஆரத்தி எடுத்தும் பூசணிக்காய்கள் உடைத்து செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளித்தும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியை கட்டி கிளம்பி விட்டார் சசிகலா.

பச்சை நிறமே பச்சை நிறமே
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பச்சை நிறம் தான் பிடிக்கும் என்பதுடன் இந்த நிறத்தை அவருக்கான ராசி நிறமாகவும் பார்த்தார். பெரும்பாலும் அவர் பச்சை நிறத்திலான சேலைகளையே முக்கிய நிகழ்வுகளுக்கு அணிந்து வந்தார். அவர் இறந்த போதும் அவருக்குப் பிடித்த பச்சை நிற பட்டுப் புடவைதான் அவர் மீது போர்த்தப்பட்டு இருந்தது.

மீனம் ராசிக்கு என்ன ராசி
ஜெயலலிதா போல சசிகலாவும் அடிக்கடி அணியும் ஆடைகளிலும் பச்சை நிறம் அதிகம் இடம் பெறும். மீனம் குருபகவானின் வீடு. குரு பகவானுக்கு பிடித்த நிறம் மஞ்சள், சந்தனம் நிறம். பச்சை நிறம் புதன் பகவானுக்கு பிடித்த நிறம். புதன் திசை நடந்தால் அந்த கால கட்டத்தில் பச்சை நிற ஆடைகளை அணியலாம். மீனம் ராசியில் பிறந்த சசிகலாவிற்கு இப்போது ராகு திசை நடைபெறுகிறது என்றாலும் அவரும் பச்சை நிறத்தில் மஞ்சள் பூக்கள் டிசைன் போட்ட சேலையை இன்று அணிந்திருக்கிறார்.

ராகு திசையில் பாதிப்பு
ராகு பகவான் நிறைய ஆசையை தூண்டுவார். அள்ளியும் கொடுப்பார். ஒருவருக்கு ராகு திசை மொத்தம் 18 ஆண்டுகள் நடைபெறும். சசிகலாவிற்கு செவ்வாய் திசை முடியும் தருணத்தில் சிறைக்கு போனார். ராகு திசையில் சிறை செல்லும் அளவிற்கு அவமானங்களை பட்ட சசிகலாவிற்கு அவ்வப்போது உடல்நல பாதிப்பும் ஏற்பட்டது.

நான்கு ஆண்டுகள் சிறைவாசம்
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலே அந்த தசாபுத்தி நடைபெறும் போது பல அவமானங்களை பட வேண்டும் என்பது விதி. சசிகலாவின் சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் செவ்வாயும் ராகுவும் இணைந்துள்ளதுதான். இதன் காரணமாக செவ்வாய் திசையில் படாத பாடு பட்டு சிறைக்கு சென்று ராகு திசையில் உடல் நல பாதிப்பினால் அவதிப்பட்டு வந்தார்.

சசிகலாவிற்கு யோகம்
சசிகலா ஜாதகத்தில் கஜ கேசரி யோகம், முசல யோகம், உச்சம் பெற்ற சனி,குரு சண்டாள யோகம் என பல யோகங்கள் இருந்தாலும் அவருக்கு ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகே சிரமத்திசைதான். அதனால்தான் முதல்வராக வேண்டும் என்று நினைத்த சசிகலாவினால் வெற்றி பெற முடியாமல் போனது.

மறைந்த கணவர்
சசிகலாவின் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் உடன் இருந்தவர் அவரது கணவர் நடராஜன். இருவரும் பல ஆண்டுகாலம் பிரிந்திருந்திருந்தாலும் திரைமறைவில் சசிகலாவிற்கு பல ஆலோசனைகள் சொன்னவர் நடராஜன்தான் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். சசிகலா சிறைக்கு போன சில மாதங்களிலேயே அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த பின்னரும் சில மாதங்களில் மரணமடைந்தார். சில உறவினர்களின் திடீர் இழப்பும் சசிகலாவை மனதளவில் பாதித்தது.

மரணயோகத்தை தவிர்த்த சசிகலா
சசிகலா முன்பு பிப்ரவரி 7ஆம் தேதி ஞாயிறன்று சென்னை திரும்புவார் என்று கூறப்பட்ட நிலையில் அந்த நாளில் மாற்றம் ஏற்பட்டது. அதற்குக் காரணம் மரணயோகம்தான். ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை கொண்ட சசிகலா, நல்ல நேரத்தில் ஊருக்கு வரவேண்டும் என்று விரும்பினார். நேற்று ஏகாதசி திதியாக இருந்தாலும் மரணயோகம் என்பதால் அன்று சென்னை திரும்புவதை தவிர்த்து விட்டார்.

நல்ல நேரத்தில் கிளம்பிய சசிகலா
ஒரு வழியாக நான்கு ஆண்டுகால சிறை தண்டனையை முடித்து விட்டார் சசிகலா. கொரோனா தனிமை காலமும் முடிந்ததை அடுத்து திங்கட்கிழமையான இன்று துவாதசி திதியும் மூல நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய நன்னாளில் கிளம்பி விட்டார். தமிழக அரசியலில் இனி அவருடைய ஒவ்வொரு நகர்வுகளும் எப்படி இருக்கும் என்பதுதான் பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

நல்ல நேரம் எப்போது
இத்தனை ஆண்டு காலம் சிரமப்பட்ட சசிகலாவிற்கு இனியாவது நல்ல நேரமாக இருக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் பல பரிகாரங்களை செய்திருக்கிறார்களாம். ராகு காலத்திற்கு முன்பாகவே சென்னை கிளம்பிய சசிகலாவிற்கு இனி எல்லாம் சுபமாக இருக்குமா பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications