"கருப்பு ஆடு இருக்கு.. வண்டியை விடுங்க".. வேகமாக புறப்பட்ட எடப்பாடி.. என்ன நடக்குது அதிமுகவில்?
சென்னை: அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வரும் நிலையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை பயணம் அதிக கவனம் ஈர்த்து உள்ளது. பல முக்கிய விஷயங்களை மனதில் வைத்து அவர் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததில் இருந்தே அதிமுகவில் இரட்டை தலைமைக்கு எதிரான கோஷங்கள் அதிகம் கேட்க தொடங்கி உள்ளது. கட்சி தலைமை சரியில்லை.. வலுவான தலைமை தேவை. ஒற்றை தலைமை தேவை என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
முக்கியமாக சசிகலாவை மீண்டும் அதிமுகவிற்குள் கொண்டு வர வேண்டும் அதுவே கட்சியை மீண்டும் மீட்டு எடுப்பதற்கு ஒரே வழி என்று நிர்வாகிகள் இடையே கோஷங்கள் எழ தொடங்கி உள்ளன.

சசிகலா
கடந்த 2ம் தேதிதான் சசிகலாவிற்கு ஆதரவாக தேனியில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதான் சசிகலா விவகாரம் உச்சம் அடைய காரணம். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் அந்த பரபரப்பு கூட்டம் நடைபெற்றது. இதை சசிகலாவிற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓபிஎஸ்ஸிடம் கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்தே சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வமின் தம்பி ஓ ராஜா பேட்டி அளித்தார்.

நீக்கம்
அதோடு வி.கே. சசிகலா திருச்செந்தூர் வந்திருந்த போது அங்கு ஓ. ராஜா சந்தித்து பேசினார். தற்போது ஓ ராஜாவும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். இதற்கு கையெழுத்து போட்டதே ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும்தான். இது ஒருபுறம் இருக்க இன்னொரு பக்கம் சசிகலா திருச்செந்தூருக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டு உள்ளார். அங்கு அவர் சமீபத்தில் சிறப்பு பூஜை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ட்ரோலில் இல்லை
இந்த நிலையில் நேற்று சேலத்தில் உள்ள தனது வீட்டில் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தினார். நெருங்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி இந்த அவசர மீட்டிங்கை நடத்தினார். இதில் பேசிய எடப்பாடி, கட்சி இப்போது கட்டுப்பாட்டில் இருப்பது போல தெரியவில்லை. கோவையிலேயே சிலர் நமக்கு எதிராக பேசுகிறார்கள். பல இடங்களில் நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வருகிறது. எதுவும் கண்ட்ரோலில் இல்லை என்று கூறி இருக்கிறாராம்.

கருப்பு ஆடு
அதோடு கட்சிக்குள் சில கருப்பு ஆடுகள் உள்ளனர். நாம் பேசுவது எல்லாம் சசிகலாவிற்கு சென்றுவிடுகிறது. ஓபிஎஸ் தரப்பிற்கும் நம்முடைய திட்டங்கள் எல்லாம் தெரிந்துவிடுகிறது. இதனால் நாம் இனி சீக்ரெட் மீட்டிங்குகளை மட்டுமே நடத்த வேண்டும். பெரிய அளவில் அனைவரையும் கூப்பிட்டு கூட்டங்களை நடத்த கூடாது என்று கூறி இருக்கிறாராம்.

வளர்ந்துவிட்டார்
அதோடு முன்பு கொங்கு மண்டலத்தில் நாம் வலுவாக இருந்தோம். இதை வைத்து கட்சியை கட்டுப்படுத்தி வந்தோம். ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் அதுவும் போய் விட்டது. இனி கட்சி கூட்டங்கள் நடந்தால் முன்பு பேசுவது போல உறுதியாக பேசி முடிவுகளை எடுக்க முடியுமா என்று தெரியவில்லை.. மீண்டும் தெற்கில், டெல்டாவில் நிர்வாகிகள் தலை தூக்குகிறார்கள் என்றும் எடப்பாடி பழனிச்சாமி புலம்பி இருக்கிறாராம்.

ஓபிஎஸ் திட்டம் என சந்தேகம்
இதுபோக ஓ ராஜா பற்றி நீண்ட நேரம் இவர்கள் ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது. ஓ ராஜா தனியாக சசிகலாவிற்கு ஆதரவாக பேச மாட்டார். அவர் பேசுகிறார் என்றால் கண்டிப்பாக அவருக்கு பின் ஓபிஎஸ் இருப்பார். இந்த திடீர் சசிகலா எழுச்சிக்கு பின் கண்டிப்பாக ஓபிஎஸ்தான் இருப்பார். அவர் பிளான்படிதான் எல்லாம் நடக்கிறது என்றும் சிலர் மீட்டிங்கில் திரியை கிள்ளி போட்டதாக தகவல்கள் வருகின்றன.

வண்டியை விடுங்க
இதையடுத்தே சென்னையில் இருக்கும் சில டாப் தலைகளை சந்திக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி காரை சென்னைக்கு விட சொல்லி இருக்கிறாராம். சென்னையில் பெயிலில் வந்த ஜெயக்குமாரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இவர் சசிகலா பக்கம் சாய்ந்து விட கூடாது என்பதில் எடப்பாடி தீவிரமாக இருக்கிறார். இன்னொரு பக்கம் சசிகலாவின் அடுத்த கட்ட திட்டங்கள் குறித்த முக்கிய தலைகளிடம் ஆலோசனை செய்வதற்காக எடப்பாடி பழனிச்சாமி சென்னைக்கு வந்து இருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications