"எல்லாத்தையும் சரி செய்துடலாம்".. சென்னை அதிமுக தொண்டருடன் சசிகலா பேசிய 4ஆவது ஆடியோ!
சென்னை: நான் நிச்சயம் வருவேன், கவலைப்படாமல் இருங்கள் என அதிமுக உறுப்பினருடன் சசிகலா பேசும் 4ஆவது ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ஏற்கெனவே அவர் பேசிய 3 ஆடியோக்கள் வெளியாகியுள்ளது. பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை வந்தார்.
மேலும் அதிமுக துண்டை கழுத்தில் அணிந்து கொண்டு ராமாவரத்தில் எம்ஜிஆர் தோட்டத்தில் திறக்கப்படாமல் இருந்த சிலையை திறந்து வைத்தார்.

அரசியல்
இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கு முன்பு நான் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக சசிகலா அறிக்கை வெளியிட்டிருந்தார். சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. கட்சிக்குள் இரு தலைமையிடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

3 ஆடியோ
இந்த நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் சசிகலா பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. அதில் தொண்டர் ஒருவரிடம் கவலைப்படாமல் இருங்கள், நான் விரைவில் வருவேன், எல்லாவற்றையும் சரி செய்து விடலாம் என கூறியிருந்தார்.

சசிகலா குரல்தான்
இது சசிகலாவின் குரல்தான் என்றும் அவர் கட்சியினரிடம் பேசி வருகிறார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த நிலையில் 2ஆவது ஆடியோவும் வெளியானது. அதில் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். அவர்களுள் சண்டையிட்டு கொள்வது மனதில் வேதனை தருகிறது என கூறியிருந்தார்.

முக்கிய நிர்வாகிகள்
அது போல் நேற்று முன் தினம் வெளியான ஆடியோவில் எடப்பாடி பழனிச்சாமி செய்த தவறுக்கு நான் என்ன செய்ய முடியும் என ராசிபுரம் அமமுக தொண்டரிடம் பேசியிருந்தார். இவர் சில அதிமுகவினரிடம் பேசியதாகவும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் பேசப்பட்ட ஆடியோ ஆதாரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

4ஆவது ஆடியோ
இந்த நிலையில் சசிகலா பேசிய 4ஆவது ஆடியோ வெளியானது. அதில் சென்னையை சேர்ந்த அதிமுக நிர்வாகி ராஜாரகுபதி என்பவருடன் சசிகலா பேசியிருக்கிறார். அவர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதற்கான அதிமுக அடையாள அட்டையும் இடம்பெற்றுள்ளது.

எல்லாத்தையும் சரி செய்துடலாம்
அவரிடம் சசிகலா பேசுகையில் கவலைப்படாதீர், நான் நிச்சயம் வருவேன், எல்லாத்தையும் சரி செய்து விடலாம் என கூறியிருக்கிறார். சசிகலா பேசுவது அமமுகவினருடன்தான். அதிமுகவினர் ஒருவரும் அவரிடம் பேசவில்லை என அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி கூறியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.












Click it and Unblock the Notifications