அதிமுகவை அழிக்க துடித்த பாஜக- சரண் அடைந்த ஓபிஎஸ்.. சந்தர்ப்பவாதி இபிஎஸ்...ஆறுமுகசாமி கமிஷனில் சசிகலா
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவுக்கு எதிராக ஓபிஎஸ் செய்த சதி, பின்னர் அவருடன் இணைந்து இபிஎஸ் செய்த சந்தர்ப்பாவத அரசியல் ஆகியவை குறித்தும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் சசிகலா விரிவாக விவரித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டது நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம். இந்த ஆணையம் அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமது அறிக்கையைத் தாக்கல் செய்தது. இந்த அறிக்கை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பல விவரங்கள், குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம்.

திமுகவுடன் கை கோர்த்த ஓபிஎஸ்
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தமது வாக்குமூலத்தி, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ் செயல்பாடுகள் குறித்து விவரித்துள்ளார். அதில் சசிகலா கூறியதாவது: ஜெயலலிதாவின் மரணத்துகுப் பின்னர் ஏதாவது ஒரு அசம்பாவிதம் அதிமுகவில் நடக்கும் என எதிர்பார்த்தேன்.அதுபோலவே சில சம்பவங்கள் நடந்தது. ஓ.பன்னீர்செல்வம், பல மறைமுக துரோக செயல்களில் ஈடுபட்டு திமுகவுடன் கை கோர்த்துள்ளார் என அதிமுக முக்கிய நிர்வாகிகள், மூத்த அமைச்சர்கள் மூலம் தெரியவந்தது. அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து விலக்க வேண்டும் என அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள் கூடி முடிவெடுத்தனர்.

அதிமுக சட்டசபை குழு தலைவர் பதவி
இதனால் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக 2017-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி ராஜினாமா கடிதம் கொடுத்தார்.அப்போது அதிமுக நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் என்னை வலியுறுத்தி அதிமுக சட்டசபைக்கு என்னை தலைவராக தேர்ந்தெடுத்தனர். இக்கட்டான அந்த சூழலில் அந்த பொறுப்பை என்னால் தட்டி கழிக்க இயலவில்லை. இந்த விவரங்கள் தமிழக பொறுப்பு ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அதன் பின்னர் ஏற்பட்ட பல அரசியல் விளையாட்டுகளால், துர்போதனையால் அதிமுகவின் அடிவேரையே அசைத்து பார்க்கும் வகையில் நேரடி துரோக செயல்களில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட அடுத்தடுத்த பல திருப்பங்கள் தமிழக அரசியலில் ஏற்பட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு மீது விமர்சனம்
மத்திய அரசு மறைமுகமாக எங்களது கட்சி, ஆட்சி, விவகாரத்தில் தலையிடுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி எந்தவித விசாரணையும் இல்லமால், எங்களுக்கான வாய்ப்புகளை வழங்காமல், மாறிவிட்ட சூழ்நிலைகளை கருத்தில் கொள்ளாமல் தவறாக தண்டனை தீர்ப்பளித்தது.

ஒரே நாளில் கட்சியில் சேர்ந்து பதவி பெற்ற தினகரன்
ஆகையால் அதிமுகவின் எதிர்காலத்தை அசைத்துப் பார்க்கக் கூடிய துரோகங்களை கட்டுப்படுத்த, முன் அனுபவமிக்க- அதிமுகவில் முக்கிய பொறுப்புகள் வகித்த, ஜெயலலிதாவால் நேரடி அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட என் உறவினர் தினகரனை கட்சிக்குக் கொண்டுவர தலைமை கழக நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏக்கள் கேட்டுக் கொண்டனர். அதனால் தினகரனை அதிமுகவில் சேர்த்து அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக்கினேன். எனது ஆலோசனைப்படி எடப்பாடி பழனிசாமி, அதிமுக சட்டசபை குழு தலைவராக்கப்பட்டார்.

எடப்பாடி பழனிசாமியின் சந்தர்ப்பவாத அரசியல்
ஓ.பன்னீர்செல்வத்துக்கு முழு அளவில் மத்திய அரசு உதவுகிறது என்பது வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்தது. அதுவரையில் எங்களுடன் இருந்த, என்னால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி கே பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து சந்தர்ப்பவாத அரசியல் செய்ய தொடங்கினார். ஜெயலலிதாவின் மரணத்தை களங்கப்படுத்த முயன்ற ஓ.பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமி கை கோர்த்துக் கொண்டு துணை முதல்வராக்கினார். ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டார் எடப்பாடி பழனிசாமி. இவ்வாறு சசிகலா கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications