எடப்பாடி செய்த தவறுக்கு என்ன செய்ய முடியும்?.. ஜெ. அளவுக்கு கட்சியை உயர்த்தலாம்.. சசிகலா ஆடியோ
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி செய்த தவறுக்கு தான் என்ன செய்ய முடியும் என தொண்டருக்கு சசிகலா ஆறுதல் கூறும் ஆடியோ வெளியாகியுள்ளது.
Recommended Video
ராசிபுரம் வெண்ணந்தூர் ஒன்றிய அமமுக செயலாளர் கோபாலுடன் சசிகலா தொலைபேசியில் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த ஆடியோவில் சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோல்வி குறித்து வருத்தப்பட்ட கோபால், சசிகலாவை அரசியலுக்கு வருமாறு அழைத்துள்ளார். அதற்கு பதிலளிக்கும் சசிகலா கொரோனா காலம் முடிந்தவுடன் தான் அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

கடிதம்
அந்த ஆடியோவில் கோபாலிடம், நீங்கள் அனுப்பிய கடிதம் எனக்கு கிடைத்தது. ஆனால் கொரோனா காலம் என்பதால் என்னால் கடிதம் எழுத முடியவில்லை. அதனால்தான் போனில் பேசுகிறேன். நான் விரைவில் நிச்சயமாக எல்லாரையும் பார்ப்பேன்.

சரி செய்யலாம்
கவலைப்படாமல் தைரியமாக இருங்கள். எல்லாத்தையும் சரி செய்துவிடலாம். தலைவர் எம்ஜிஆரும், அம்மா ஜெயலலிதாவும் எப்படி கட்சியை வைத்திருந்தார்களோ அந்த அளவுக்கு நான் கொண்டு சென்றுவிடுவேன். எடப்பாடி பழனிச்சாமியை நினைத்தால் எனக்கு ரத்த கண்ணீரே வருகிறது அம்மா என கோபால் கூறுகிறார்.

எடப்பாடி பழனிச்சாமி
அதற்கு சசிகலாவோ அவங்க செய்த தப்புக்கு நான் என்ன செய்வது சொல்லுங்க. எல்லாவற்றுக்கும் நல்ல முடிவு வரும் கவலைப்படாதீங்க. துணிச்சலாக இருங்கள். விரைவில் வந்து நான் நல்லது செய்வேன் என சசிகலா கூறினார். இதுகுறித்து கோபால் செய்தியாளர்களிடம் கூறுகையில் அதிமுகவில் உள்ள நிர்வாகிகள் கட்சியை நல்லபடியாக வழிநடத்துவார்கள் என நினைத்தோம்.

சீரழித்தல்
ஆனால் அந்த கட்சியை எல்லாம் சேர்ந்து சீரழித்துவிட்டார்கள். சசிகலாவின் ஆதரவாளர்களை வெளியேற்றினார்கள். கொரோனா காலம் முடிந்தவுடன் சசிகலா மீண்டும் வருவார்கள். அதிமுகவை மீண்டும் அவர் மீட்டெடுப்பார் என்றார். ஏற்கெனவே சசிகலா பேசிய இரு ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மூன்றாவதாக இந்த ஆடியோ வெளியாகி கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications