மீண்டும் அதிமுக கொடி கட்டிய கார்- அப்பல்லோ விசிட்- ஆடியோ அரசியலைத் தொடர்ந்து சசிகலாவின் அடுத்த கேம்
சென்னை: அதிமுக கொடி கட்டிய ஜெயலலிதாவின் காரில் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றதன் மூலம் அடுத்த ஆட்டத்தை சசிகலா தொடங்கிவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா மறைந்த உடன் ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டார். அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றினார் சசிகலா.
ஆனால் ஓபிஎஸ்ஸிடம் இருந்து முதல்வர் பதவியை பறித்த சசிகலா தாம் முதல்வராவதில் மும்முரமாக இருந்தார். இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

4 ஆண்டுகள் சிறை
ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததால் சசிகலாவின் கனவு தகர்ந்தது. பெங்களூருவில் 4 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார் சசிகலா.

சசிகலா நீக்கம்
இந்த காலகட்டத்தில் சசிகலா அதிமுகவில் இருந்து முற்றிலும் ஓரங்கட்டப்பட்டார். அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் சசிகலா நீக்கப்பட்டார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டனர்.

அதகள வரவேற்பு
பெங்களூரு சிறைவாசத்துக்குப் பின்னர் தமிழகம் திரும்பிய சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் வழிநெடுக 23 மணிநேரம் வரவேற்பு கொடுத்து அதகளப்படுத்தினர். சசிகலாவின் வருகையால் அதிமுகவில் செங்குத்து பிளவு ஏற்படும் என கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை.

சசிகலாவுக்கு எதிர்ப்பு
சட்டசபை தேர்தலின் போது திடீரென தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பேன் என சசிகலா அறிவித்தார். சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இதனையடுத்தாவது அதிமுக தம் வசம் என எதிர்பார்த்தார் சசிகலா. அதுவும் நடக்கவில்லை. மாறாக சசிகலாவுக்கு எதிராக அதிமுகவின் மாவட்ட கழகங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆடியோ அரசியல்
இந்த நிலையில் அதிமுக, அமமுக தொண்டர்களுடன் தொலைபேசியில் உரையாடி அதன் ஆடியோவை ஊடகங்களுக்கு வெளியிட்டு வந்தார் சசிகலா. இதுவரை 100க்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல் ஆடியோக்களை சசிகலா தரப்பு வெளியிட்டது. இந்த ஆடியோக்களில் அதிமுகவை தாம் மீண்டும் கைப்பற்றுவேன் என திரும்ப திரும்ப சசிகலா கூறி இருந்தார்.

டிவிகளுக்கு பேட்டிகள்
இதனைத் தொடர்ந்து சசிகலா தம்முடைய இமேஜை உயர்த்தும் வகையில் டிவி சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்த பேட்டிகளில் அதிமுக, ஜெயலலிதா, எம்ஜிஆர், ஜானகி அம்மையார் என பலரையும் பற்றி சசிகலா கூறி இருந்தார். இப்படி நாள்தோறும் பரபரப்பை கிளப்பிய சசிகலா இன்று அதிரடியாக அடுத்த ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார்.
Recommended Video

அப்பல்லோவுக்கு திடீர் விசிட்
அதிமுகவின் அவைத்தலைவரான மதுசூதனன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்த்து நலம் விசாரிக்க அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா சென்றார். பெங்களூரு சிறையில் இருந்து சென்னை திரும்பிய போது அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா பயணம் செய்ய கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் அதிமுக கொடியுடனான காரில் சசிகலா அப்பல்லோ சென்றார்.

சசிகலாவின் அடுத்த கேம்
அதுவும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றிருந்த நிலையில் சசிகலாவும் அங்கு வருகை தந்தார். இதனால் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து விரைவாகவே கிளம்பிவிட்டார். அப்பல்லோ மருத்துவமனைக்கு ஜெயலலிதா பயன்படுத்திய காரில் கட்சி கொடியை கட்டிக் கொண்டு சென்றதன் மூலம் அதிமுகவுக்கு மீண்டும் வரப்போகிறேன் என்பதை அக்கட்சியின் தொண்டர்களுக்கு அழுத்தமாகவே உணர்த்தி இருக்கிறார் சசிகலா.












Click it and Unblock the Notifications