"தேடி வரும் பீடம்.." சோழிகளை உருட்டி சொன்ன ஜோதிடர்கள்.. சசிகலா எடுத்த புது சபதம்!
சென்னை: புத்தாண்டில் சில சபதங்களை எடுத்திருக்கிறாராம் சசிகலா. அதுபற்றிதான் இப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வட்டாரத்தில் அதிக பேச்சாக இருந்து வருகிறது.
கடந்த 26ம் தேதி சசிகலாவின் ஆஸ்தான ஜோதிடர்கள் சிலரிடம் புதிய ஆண்டு எப்படி இருக்கும் என கேட்டிருக்கிறார். அவர்களும் பல்வேறு கணக்குகளைப் போட்டுப்பார்த்து விட்டு, நீங்கள் எதிர்பார்க்கும் தலைமை பீடம் உங்களைத் தேடி வந்தே தீரும். ஏப்ரல் 22-க்கு பிறகு அதற்கான காலம் கனியும். அதனை நோக்கிய உங்கள் முயற்சியை தொடர வேண்டும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி பெற மீண்டும் வாய்ப்பு...உடனே இந்த விசயங்களை செய்யுங்க - ஐ. பெரியசாமி
இதனை மனதில் தாங்கிய அவர், கேரள நம்பூதிரிகளில் தனக்கு நம்பிக்கையான பணிக்கர் ஒருவரிடம் ஜோதிடர்களின் கணிப்புகளை எடுத்துச் சொல்லி, சரியாக இருக்குமா ? என கேட்டுள்ளார் சசிகலா.
சோழிகளை உருட்டிய ஜோதிடர்கள்
அந்த பணிக்கரும் சோழிகளை உருட்டிப் பார்த்து விட்டு, தமிழக ஜோதிடர்கள் சொல்வது சரிதான். இன்னும் 4 மாதத்தில் உங்களுக்கான நேரம் ஸ்டார்ட் ஆகிறது. எண்ணிய காரியங்கள் திண்ணமாகும் என சொல்லியிருக்கிறாராம். இதனால் ஏக குஷியில் இருக்கிறார் சசிகலா.
ஜரூர் வேலை
அதனால், அதிமுகவின் தலைமை பதவியைப் பிடிப்பது, பொதுச்செயலாளர் நான் தான் என போடப்பட்ட வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பை பெறுவதில் சீரியஸ் காட்டுவது, மத்திய அரசின் விசாரணை அமைப்புகளில் இருக்கும் தனக்கு எதிரான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வருவது, சொத்து குவிப்பு ஊழல் வழக்கில் அட்டாச்ட் செய்யப்படாத சொத்துகளை ஒருங்கிணைப்பது, போயஸ்கார்டன் பகுதியில் ஜெயலலிதாவின் இல்லத்துக்கு எதிரே புதிதாக தான் கட்டியுள்ள பங்களாவை தன் வசமாக்க சட்ட ரீதியிலான வழிகளுக்கு அழுத்தம் தருவது என 5 சபதங்களை எடுத்திருக்கிறாராம்.
5 சபதங்கள்
இதில் எந்த சபதம் நிறைவேறும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது என்கிறார்கள். ஜோதிடர்களும் பணிக்கரும் கொடுத்த நம்பிக்கையில் இந்த புத்தாண்டு சபதங்களை எடுத்திருக்கிறார் என்றும் அவரது தரப்பிலிருந்து செய்திகள் கசிகின்றன.
நடக்குமா?
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்ற பாடலுக்கு இணங்கதான் கடந்த பல வருடங்களாக சசிகலா அரசியல் வாழ்க்கை அமைந்துள்ளது. எனவே என்னதான் சபதம் போட்டாலும், அது நடக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்விதான். சோழி சொன்னது உண்மையானால் பீடம் கிடைக்கும், அல்லது, வழக்கம்போல அமமுகவினருக்கு அறிக்கைகள்தான் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.