"பயப்படாதீங்க".. அஸ்திரத்தை எடுக்கும் சசிகலா.. ஜெ.நினைவிடம் செல்ல முடிவு.. பாதுகாப்புகோரி மனுதாக்கல்
ஜெயலலிதா நினைவிடம் செல்வதால் பாதுகாப்பு கோரியுள்ளார் சசிகலா
சென்னை: அக்டோபர் 16ம் தேதி சசிகலா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்... இதையடுத்து, பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையரிடம் மனுதாக்கல் செய்துள்ளார் சசிகலா.
அதிமுகவின் 50-ம் ஆண்டு பொன்விழா வரும் அக்டோபர் 17-ம் தேதி பிரம்மாண்டமான ஏற்பாடுகளோடு கொண்டாட அதிமுகவினர் தயாராகி வருகின்றனர்.. அன்றைய தினமே, அதிமுக கட்சி கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கி பொன்விழாவை கொண்டாட தலைமை கழகம், நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, தமிழகம் முழுக்க அதிமுகவினர் விழாவுக்கு தயாராகி வருகின்றனர்.. ராயப்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்தையும் புனரமைத்து, வண்ணம் பூசும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

நினைவிடம்
இந்நிலையில், வரும் அக்டோபர் 16-ம் தேதி ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா செல்லவிருப்பதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியாகின.. அதிமுகவின் பொன்விழாவையொட்டி, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு அவர் அஞ்சலி செலுத்த சசிகலா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.. ஏற்கனவே இப்படித்தான் பெங்களூரு ஜெயிலில் இருந்து வந்ததுமே, சசிகலா நினைவிடம் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் செல்லவில்லை.

பிறந்தநாள்
அதேபோல, ஜெயலலிதா பிறந்த நாளன்றும் நினைவிடம் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், செல்லவில்லை.. சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததை தொடர்ந்து அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என்று சிலர் தெரிவித்து வந்தனர்.. இது தொடர்பாக தொண்டர்களிடமும் சசிகலா போன் மூலம் பேசி வந்தார்.., இப்போது உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில், சசிகலாவின் வருகையை அவரது ஆதரவாளர்கள் மேலும் அதிகமாக எதிர்பார்க்க துவங்கி உள்ளனர்.

வருகை
"கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தொண்டர்களிடம் ஒரு தாய்போல் அனுசரணையாக இருந்து காப்பாற்ற வேண்டும்.. இப்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை.. விரைவில் வருகிறேன்.. எல்லோரையும் சந்திக்கிறேன்... பயப்பட வேண்டாம்.. கவலைப்படாதீர்கள்" என்று சமீபத்தில் சசிகலா கூறியிருந்தார்.. அதற்கேற்றார்போல், அதிமுக பொன்விழா கொண்டாட்டங்கள் வரும் 17ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அந்த சந்தர்ப்பத்தை தன்னுடைய அரசியல் மறுபிரவேசமாக சசிகலா எதிர்கொள்ளகூடும் என்கிறார்கள்.

பாதுகாப்பு
எனவேதான், அதற்கு முந்தைய நாளான 16ம் தேதி சசிகலா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்.. இதற்காக பாதுகாப்புக் கோரி சென்னை மாவட்ட காவல் ஆணையரிடம் சசிகலா தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு காவல்துறை தகுந்த பாதுகாப்பு அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம்
டிடிவி தினகரன் மகள் திருமணத்திலேயே தன்னுடைய அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்பட்டது.. ஆனால், எளிமையாக நடந்து முடிந்த திருமணத்தில் அரசியல் பேச்சு எதுவும் எழவில்லை.. இப்போது, நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததை அடுத்து, ஜெயலலிதா சமாதியில் வழிபட்ட பிறகு சசிகலா முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது..

சுற்றுப்பயணம்
அதேபோல, ஜெயலலிதா நினைவிடத்திற்கு 16ம் தேதி செல்லும் சசிகலா பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.. அந்த சுற்றுப்பணயம் அதிமுக தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துமா? அல்லது அந்த மாற்றம் வரப்போகும் எம்பி தேர்தலில் எதிரொலிக்குமா? இதை அதிமுக இரட்டை தலைமை எப்படி எதிர்கொள்ள போகிறது? உள்ளாட்சி தேர்தலில் மண்ணை கவ்வியுள்ள அமமுகவின் நிலைமை என்ன என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications