போயஸ்கார்டனில் சசிகலா... புதுவீடு வேலைகள் விறுவிறுப்பு விரைவில் கிரகப்பிரவேசம் - அடுத்த ஆட்டம்
போயஸ்கார்டனில் கட்டப்பட்டு வரும் புது வீட்டில் விரைவில் குடியேறப்போகிறார் சசிகலா. இங்கிருந்துதான் தனது அடுத்த அதிரடி ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகிறார்.
சென்னை: சசிகலா விரைவில் போயஸ்கார்டனில் உள்ள புதுவீட்டில் குடியேறப்போகிறார். இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. போயஸ்கார்டனுக்கு சென்று புது வீட்டு பணிகளை பார்வையிட்டுள்ள சசிகலா, அதில் செய்ய வேண்டிய சில மாற்றங்களை சொல்லிவிட்டு வந்திருக்கிறாராம். தனது அடுத்த அரசியல் நகர்வுகளை இங்கிருந்துதான் ஆரம்பிக்கப் போகிறாராம் சசிகலா.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி மாதம் விடுதலையானார். கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஒரு வார ஓய்வுக்குப் பிறகு பிப்ரவரி 8ஆம் தேதி சென்னை திரும்பினார்.
தீவிர அரசியலில் என்று சொன்ன சசிகலா, திடீரென அரசியலை விட்டு ஒதுங்கப்போவதாக கூறிவிட்டு ஆன்மீக பயணம் கிளம்பினார். குல தெய்வ கோவில், திருவிடை மருதூர், ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என பல ஊர் கோவில்களுக்கும் சென்று திரும்பியுள்ளார் சசிகலா.
பிளஸ் 2 செய்முறை தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு 23 வழிகாட்டு நெறிமுறைகள் - அரசு வெளியீடு
சசிகலாவிற்கு தனி வீடு
ஜெயலலிதாவுடன் சுமார் 25 வருடங்களுக்கு மேல் போயஸ் கார்டனில் இருந்தார் சசிகலா. வேதா நிலைய இல்லம் தற்போது அரசுடைமையாக்கப்பட்டு விட்டது. அந்த வீடு தனது கையை விட்டு போனது சசிகலாவிற்கு வருத்தம்தான். எனவேதான் போயஸ்கார்டன் பகுதியிலேயே வேதா இல்லத்துக்கு எதிரிலேயே சசிகலாவுக்கு எனப் புதிய வீடு கட்டும் பணி நடந்துவருகிறது.
புது வீட்டில் குடியேறும் சசிகலா
போயஸ்கார்டன் பகுதியில் வசித்தால் தனது கையை விட்டுச் சென்ற அதிகாரம் மற்றும் கட்சி நிர்வாகம் என அனைத்தும் திரும்பக் கிடைக்கும் என நினைக்கிறார். எனவேதான் புதிய வீட்டில் விரைவில் குடியேற நினைக்கிறார் சசிகலா. கடந்த மாதம் அந்த வீட்டின் கட்டுமானப்பணிகளை பார்வையிட சென்ற போது போயஸ்கார்டனில் வேதா நிலையம் அருகில் இருந்த பிள்ளையாரை வழிபட்டார் சசிகலா.
புது வீட்டில் இருந்து ஆரம்பம்
ஜெயலலிதா அரசியல் பயணம் தொடங்கிய அதே போயஸ் கார்டன் பகுதியில் இருந்தே தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கிறார் சசிகலா. இதன் காரணமாகவே அவசர அவசரமாக போயஸ் கார்டனில் மிகப்பெரிய பங்களாவை கட்டிவருகிறார். புது வீடு கட்டுமானப்பணிகள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.
புது வீடு செல்வது எப்போது
இந்த கட்டடம் கே.கார்த்திகேயன் என்பவர் இயக்குநராக இருக்கும் ஸ்ரீஹரிசந்தனா எஸ்டேட்ஸ் பிரைவேட் லிட் சார்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இளவரசியின் மருமகன் ராஜராஜன் மேற்பார்வையில்தான் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது விரைவில் கிரகப்பிரவேசம் நடத்தி புது வீட்டில் குடியேற வேண்டும் என்று நினைக்கிறார் சசிகலா.
பணிகள் விறுவிறுப்பு
தனக்காக கட்டப்பட்டு வரும் இந்த வீட்டின் கட்டுமான பணிகளை காண சசிகலா வெள்ளிக்கிழமை மாலை போயஸ் கார்டன் சென்றார். சசிகலா உடன் இளவரசியின் மகன் விவேக் ஜெயராம் உள்ளிட்ட அவரது உறவினர்களும் வந்தனர். சுமார் 2 மணி நேரம் அங்கிருந்த சசிகலா, கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
சசிகலா செல்வாரா?
பராமரிப்பு பணிக்காக ஜெயலலிதாவின் நினைவிடம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. வேதா நிலையம் வீடு இன்னமும் பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படவில்லை. பொதுமக்கள் பார்வைக்கு வேதா நிலையம் அனுமதிக்கப்படும் போது சசிகலா வேதா நிலையத்தில் அடிஎடுத்து வைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.