அதிமுக - அமமுக இணைப்பு: எடப்பாடி பழனிச்சாமியிடம் சமாதானம் பேசச்சொன்ன சசிகலா - மனம் திறந்த சீமான்
தேர்தலில் அதிமுகவுடன் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று சசிகலா உளமாற விரும்பினார் என்று சீமான் கூறியுள்ளார்.
சென்னை: சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று சசிகலா உளமாற விரும்பியதாக சீமான் கூறியுள்ளார். அதிமுகவும் அமமுகவும் இணைவதற்கு சமாதானம் பேச வேண்டும் என தன்னிடம் சசிகலா கேட்டுக்கொண்டதாகவும் கூறியுள்ளார் சீமான்.
சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, சென்னை வந்த பின்னர் யாரையும் சந்திக்காமல் இருந்தார். சில நாட்களில் திடீரென சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்களை சந்தித்து பேசினார். இயக்குநர் பாரதிராஜா, ராதிகா, சரத்குமார், டிராபிக் ராமசாமி, சீமான் ஆகியோரும் சந்தித்து பேசினர்.
எப்போதும் யாருடனும் கூட்டணி இல்லை என்றும் கழகங்களுடன் கூட்டணி கிடையாது என்றும் சொல்லி வந்த சீமான் சசிகலாவை சந்தித்தது பேசுபொருளானது. சசிகலாவை கடுமையாக விமர்சித்த அவரே வீட்டிற்கு சென்று சந்தித்தது பற்றி பலரும் விமர்சித்தனர்.
திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை... இறுதியாகும் தொகுதி பங்கீடு?
சந்தித்தது ஏன்
சசிகலாவை சந்தித்தது ஏன் என்றும் பேசியது என்ன என்றும் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சசிகலா சிறையிலிருந்து திரும்பியதும் நான் அவரை நேரில் சந்தித்தேன். அவர் என்னையும் என் மனைவியையும் பார்க்க விரும்பினார். அவரின் அழைப்பிலேயே நான் சந்தித்தேன் என்று கூறினார் சீமான்.
அதிமுக உடன் இணைய விருப்பம்
அந்தச் சந்திப்பில் தனிப்பட்ட விஷயங்களைத் தவிர்த்து அரசியலும் பேசப்பட்டது. எதிர்வரும் தேர்தலில் அதிமுகவுடன் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று சசிகலா உளமாற விரும்பினார்.
எடப்பாடி பழனிச்சாமியிடம் சமாதானம்
அதிமுகவும் அமமுகவும் இணைவதற்கு நான் சமாதானம் பேச வேண்டும் என அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நான் நன்றாகப் பேசுவேன். நான் பேசிப் பார்க்கிறேன் என சொன்னேன். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை என்று சீமான் கூறியுள்ளார்.
அதிமுக உடன் கூட்டணி சேர அழுத்தம் தரவில்லை
நானும் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று அழுத்தவில்லை. ஏனெனில், நான் யாருடனும் கூட்டணி சேர மாட்டேன் என்று அவருக்குத் தெரியும் என்றும் சீமான் கூறியுள்ளார். அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்ட சசிகலா, தமிழகத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர, ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளான அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.