சசிகலாவின் அடுத்த பிளான்.. குழப்பங்களுக்கு இடையே ரூட்டை மாற்றி.. முதல் குறி அண்ணாமலை ஏரியாவாம்..!
சென்னை : சசிகலா தனது அடுத்தகட்ட அரசியல் சுற்றுப்பயணத்தை கரூரில் இருந்து தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
அதிமுகவில் நிலவி வரும் குழப்பங்களுக்கு மத்தியில் சசிகலா ஒரு தனி ரூட் எடுத்து அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார். கடந்த ஞாயிறன்று பிரச்சார வாகனத்தில் திருத்தணி சென்று தொண்டர்களைச் சந்தித்தார்.
இந்நிலையில், அடுத்தகட்டமாக சட்டமன்றத் தொகுதி வாரியாக தீவிர சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாகவும், அதனை கரூரில் இருந்து தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.

புரட்சிப்பயணம்
அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள சூழலில், தமிழகம் முழுவதும் புரட்சிப் பயணம் மேற்கொண்டு தொண்டர்களைச் சந்திக்க இருப்பதாக சசிகலா சமீபத்தில் அறிவித்தார். எம்ஜிஆரின் பெருமைகளையும், ஜெயலலிதாவின் எண்ணங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக மகத்தான சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன் என அறிவித்திருந்தார் சசிகலா. தான் அறிவித்தபடி, முதற்கட்ட சுற்றுப்பயணத்தை சென்னை தி.நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார் சசிகலா.

திருத்தணி சென்ற சசிகலா
அதிமுக கட்சிக் கொடி கட்டிய பிரச்சார வாகனத்தில் சசிகலா பயணத்தை தொடங்கினார். சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோயம்பேடு, பூந்தமல்லி, திருவள்ளூர் சாலை வழியாக திருத்தணி சென்றார் சசிகலா. செல்லும் வழியில் பல இடங்களில் தொண்டர்கள், பொதுமக்களைச் சந்தித்தார். அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் திருத்தணியில் பேசிய சசிகலா, அதிமுக எனது தலைமையின் கீழ் வரும், ஒற்றைத் தலைமை விரைவில் ஏற்படும் எனத் தெரிவித்தார்.

ஆதிக்கத்தை அடக்க
இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் ஆதிக்கத்தை அடக்க சசிகலாவின் உதவியை நாடி வருவதாக கூறப்படுகிறது. சசிகலாவுக்கு நெருக்கமானவர்களுடன் ஓபிஎஸ் பேசி வருவதாகவும், விரைவில் சசிகலாவை சந்தித்துப் பேசுவார் என்றும் கூறப்பட்டது. சசிகலா ஆதரவைப் பெறுவதன் மூலம் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாயத்தினரின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்றுவிடலாம் என முயற்சி செய்து வருகிறார் ஓபிஎஸ் என உள்வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் தீவிர சுற்றுப்பயணம்
ஆனால், அ.தி.மு.க.வுக்கு தான் தலைமை ஏற்க வேண்டும் என்பதில் சசிகலா உறுதியாக இருப்பது அவரது பேச்சு மற்றும் திட்டங்களின் மூலம் தெரியவந்துள்ளது. திருத்தணி சுற்றுப்பயணத்தை தொடர்ந்து சட்டமன்றத் தொகுதி வாரியாக தனது அடுத்தக்கட்ட சுற்றுப் பயணத்தை தீவிரப்படுத்த சசிகலா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், அ.தி.மு.க குழப்பங்களுக்கு மத்தியில் அதிருப்தியில் இருப்பவர்களை தன் பக்கம் இழுக்க சசிகலா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கரூர்
தொகுதி வாரியாக அடுத்தகட்ட சுற்றுப்பயண திட்டத்தை வகுத்து வரும் சசிகலா, கரூரில் இருந்து தனது பயணத்தை தொடங்குவார் என்று கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் தனது பயணத்தை கரூரில் இருந்து சசிகலா தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூருக்கு செல்லும் சசிகலா அங்கிருந்து பயணத்தை தொடங்கி, தொண்டர்களைச் சந்திப்பார் என்றும், அடுத்தடுத்த நாட்களில் சுற்றுப் பயணத்தை வேகப்படுத்துவார் என்றும் கூறப்படுகிறது.

அண்ணாமலை ஏரியா
அதிமுகவை ஓவர்டேக் செய்ய முயன்று வரும் பாஜகவின் மாநில தலைவரான அண்ணாமலையின் ஏரியாவான கரூரில் இருந்து சசிகலா தனது தீவிர சுற்றுப் பயணத்தை தொடங்கவிருப்பதே ஒரு மெசேஜ் தான் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். ஆனால், எல்லாமே ஜோசியர்கள் போட்டுக்கொடுத்த திட்டம் என்றும், ஆன்மீக நம்பிக்கை கொண்ட சசிகலா தனது முன்னேற்றத்திற்காக ஜோசியர்களின் ஆலோசனைப்படியே நடந்துகொள்கிறார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications