களத்தில் டெல்லி சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு.. சாத்தான்குளம் போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்கிறது
சென்னை: சாத்தான்குளம், தந்தை-மகன் சித்ரவதை கொலை வழக்கில், ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 போலீசாரை சிபிஐ காவலில் எடுத்த விசாரிக்க உள்ளனர்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர், குறிப்பிட்ட நேரத்திற்கு அதிகமாக கடையை திறந்து வைத்த குற்றச்சாட்டின்பேரில் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து மரணமடைந்தனர்.
ஜூன், 22ம் தேதி பென்னிக்சும், 23ம் தேதி, ஜெயராஜூம் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்திலே மட்டுமல்லாது, இந்தியா முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிபிசிஐடி விசாரணை
இந்தநிலையில், ஜெயராஜின் மனைவி செல்வராணி, தனது கணவர் மற்றும் மகன் ஆகியோர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இருவரின் உடல் பிரேதபரிசோதனையை வீடியோ பதிவு செய்ய உத்தரவிடக்கோரி சென்னை ஹைகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். விசாரணைகளுக்கு பிறகு, சாத்தான்குளம் வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்த ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து சிபிசிஐடி விசாரணையை துவங்கியது.

சிபிஐ விசாரணை ஆரம்பம்
இந்த நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ., இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது. இனி சி.பி.ஐ அதிகாரிகள் தங்கள் வழக்கமான பாணியில் இந்த வழக்கை விசாரிப்பார்கள். ஆனால் தமிழக சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு இடையே நேரடியாக டெல்லி அதிகாரிகள் களத்துக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாட்சிகள், ஆவணங்கள்
சி.பி.ஐ விசாரணை நடத்துவதற்குள் சாட்சியங்கள் கலைக்கப்பட்டுவிடும் என்பதால், அதுவரை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. எனவேதான் சிபிசிஐடி அதிவேகத்தில் விசாரணையை நடத்தி, ஆய்வாளர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ் பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேர் மீதும் கொலைவழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதன்பிறகு மேலும் 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல தடயங்கள்
இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தியதோடு, காவல் நிலையத்தில் தடயவியல் ஆய்வுகள் செய்யப்பட்டன. சிசிடிவி ஆதாரங்கள், வியாபாரிகள் வாக்குமூலம் என இந்த வழக்கில் நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவை அனைத்தையும் சிபிஐ இனிமேல் தங்கள் வசத்திற்கு கொண்டுவரும். பிறகு அவற்றில் இருந்து கிடைக்கும் ஆதாரங்களை வைத்து விசாரணையை ஆரம்பிப்பார்கள்.

சிறப்பு புலனாய்வு குழு
இந்த கொலை வழக்கு ஐ.நா. கவனத்துக்கு வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனவே, டெல்லி சிபிஐ அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட போலீசாரை சிபிஐ காவலில் எடுத்த விசாரிக்க உள்ளனர். போலீஸ் சூப்பிரண்டு அல்லது துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் விசாரணை இந்த வார இறுதிக்குள் தொடங்க கூடும். டெல்லியில் இருந்து கூட சிறப்பு புலனாய்வு படை விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications