தமிழக அரசை விமர்சிப்பதால் சவுக்கு சங்கரை கைது செய்யவில்லை: கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கொடுத்த விளக்கம்
சென்னை: திமுகவை விமர்சனம் செய்வதற்காக சவுக்கு சங்கரை காவல்துறை கைது செய்யவில்லை என்று அக்கட்சியின் நிர்வாகி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார். சவுக்கு சங்கரை கைது செய்வதில் காவல்துறை நாகரீகமாக நடந்துள்ளதாக கூறிய அவர், நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் சவுக்கு சங்கரை கைது செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
சவுக்கு மீடியா என்ற யூடியூப் மூலமாக சவுக்கு சங்கர் திமுக, தவெக, அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீதும், அவரது குழு மீதும் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா சாதிக் என்பவர் புகார் அளித்திருந்தார். அவதூறாக பேசி தன்னிடம் இருந்து ரூ.2 லட்சம் பறித்துவிட்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஒரு மாதமாக போலீசார் சம்மன் அனுப்பிய போதும், சவுக்கு சங்கர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில் சவுக்கு சங்கரை கைது செய்வதற்காக போலீசார் இன்று காலை அவரது வீட்டில் சுற்றி வளைத்தனர். இதையடுத்து வீட்டை உள் பக்கமாக பூட்டிவிட்டு சவுக்கு சங்கர் நீண்ட நேரமாக போக்கு காட்டி வந்தார். அதுமட்டுமல்லாமல் போலீசார் தன்னை கைது செய்ய வந்துள்ளதாகவும் வீடியோ வெளியிட்டார்.
பின்னர் சுமார் 6 மணி நேரத்திற்கு பின் சவுக்கு சங்கர் வீட்டின் கதவை கடப்பாரை வைத்து உடைத்து போலீசார் கைது செய்தனர். இதனால் அதிமுக தரப்பில் தமிழக அரசை யார் விமர்சித்தாலும் அவர்களை காவல்துறை கைது செய்கிறது என்று விமர்சிக்கப்பட்டது. இதற்கு திமுக நிர்வாகி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பதில் அளித்துள்ளார்.
அதில் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேசுகையில், இந்த அரசை விமர்சிப்பவர்களையும் காவல்துறை கைது செய்கிறது என்றால், அதிமுகவினரை கைது செய்திருக்க வேண்டும். சட்டம் தன் கடமையை செய்கிறது. ஒரு தயாரிப்பாளரை மிட்டிய வழக்கில் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. காவல்துறை அவரை சென்று பார்க்கிறார்கள். அவர்கள் எதுவும் அத்துமீறவில்லை.
அப்போது உங்களை கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். பின்னர் வழக்கறிஞர் வர வேண்டும் என்று கூறி இருக்கிறார். வழக்கறிஞர் வந்த போதும் கூட அவர் கைதாக மறுத்திருக்கிறார். காவல்துறை நாகரீகமாக நடந்த போதும் கூட அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. காவல்துறைக்கு மேற்பட்ட அதிகாரம் தனக்கு இருப்பதாக நினைத்தால், சட்டத்திற்கு மேலானவர்கள் யாருமில்லை.
திமுக மீது இன்று, நேற்றா அவதூறுகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். அவதூறுகளை தினம் தினம் அள்ளி வீசிக் கொண்டு தானே இருக்கிறார். அதனால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. திமுகவுக்கு தனிப்பட்ட நபர்கள் மீது எந்தவித கோபமும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications