சவுக்கு சங்கர் கைது அப்பட்டமான துன்புறுத்தல்! காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் விமர்சனம்
சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கர் கைது அப்பட்டமான துன்புறுத்தல் என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்னொரு முறை அவரை கைது செய்த போதும் கார்த்தி, சவுக்கு சங்கருக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: "நான் சவுக்கு சங்கரை ஆதரிக்கவில்லை என்றாலும், அவர் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவது அப்பட்டமான துன்புறுத்தலாகும் என தெரிவித்துள்ளார்.
அவதூறாக பேசி தன்னிடம் இருந்து 2 லட்சம் பறித்துவிட்டதாக சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா கடந்த மாதம் சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீஸார் இன்று காலை சவுக்கு சங்கரின் ஆதம்பாக்கம் வீட்டிற்கு சென்றனர்.
அங்கு அவரது வீட்டுக் கதவை போலீஸார் தட்டினர். அப்போது உள்பக்கம் தாழிடப்பட்டிருந்ததால் சவுக்கு சங்கரை கைது செய்ய முடியவில்லை. மேலும் தனது வழக்கறிஞர்கள் வந்தால்தான் கதவை திறப்பேன் என சவுக்கு தெரிவித்தார்.
நீண்ட நேரமாக காத்திருந்த நிலையில் தீயணைப்பு படையினர் உதவியுடன் அவரது வீட்டுக் கதவை கடப்பாரை கொண்டு உடைத்தனர். இதையடுத்து சவுக்கு சங்கரை ஆதம்பாக்கம் வீட்டில் வைத்து கைது செய்தனர்.
சவுக்கு சங்கர் கைதுக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் எம்பி கார்த்தி சிதம்பரமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications