திருவாரூரோ திருவள்ளூரோ.. உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவேன்.. சவுக்கு சங்கர் அதிரடி
சென்னை: அரசியலில் தேவைப்பட்டால் களமிறங்குவேன் என்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிடுவேன் என்றும் யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
யூடியூபரான சவுக்கு சங்கர் தனது சமூகவலைதள பக்கத்தில் அரசியல் கருத்துகளை முன் வைத்து வருவார். பெரும்பாலும் இவரது கருத்துகள் மத்திய, மாநில அரசை விமர்சிப்பதாகவே இருக்கும்.
இந்த நிலையில் நீதித் துறையில் ஊழல் நிறைந்திருப்பதாக ஒரு கருத்தை அவருடைய டவிட்டர் பக்கத்தில் சவுக்கு சங்கர் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமி நாதன், புகழேந்தி ஆகியோர் தாமாக முன்வந்து சவுக்கு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ய மதுரை உயர்நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டனர்.

நீதிமன்ற அவமதிப்பு
அதன்படி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அவர் மீது பதியப்பட்டது. அதுகுறித்து விசாரணையும் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் கூறிய கருத்துகளில் இருந்து பின்வாங்க சவுக்கு சங்கர் மறுத்தார். இதையடுத்து அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும் நீதித் துறை குறித்து ட்விட்டரிலும் யூடியூப் சேனலிலும் பதிவிட்ட வீடியோவை டெலிட் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை சிறை
இதையடுத்து மதுரை சிறையிலிருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்ட சவுக்கு சங்கர் தனக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அப்போது அந்த வழக்கு நீதிபத் சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரிக்கப்பட்டது. அப்போது அவர், நீதிமன்றத்தை விமர்சிக்கக் கூடாது என சொல்லவில்லை, ஆனால் எதற்கு ஒரு வரைமுறை உள்ளது. ஆதாரமே இல்லாமல் ஒரு குற்றச்சாட்டுகளை எப்படி சவுக்கு சங்கர் முன்வைத்தார் என கேள்வி எழுப்பப்பட்டது.

நீதித் துறை
இதுவரை நீதித் துறை மீது பல்வேறு தரப்பினர் என்ன பேசினார்களோ அதைதான் தானும் பேசினேன் என சவுக்கு சங்கர் தெரிவித்தார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் விதித்தது. இந்த நிலையில் சவுக்கு சங்கர் சிறையிலிருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

சவுக்கு சங்கருக்கு ஜாமீன்
சவுக்கு சங்கர் மீதான 4 வழக்குகளும் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது வந்த நிலையில் 4 வழக்குகளில் இருந்தும் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து அவர் கடலூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் சவுக்கு சங்கர் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் சிறையில் என்னை கொடுமைப்படுத்தினார்கள். அதன் காரணமாக உண்ணாவிரதம் இருந்தேன்.

உதயநிதியை எதிர்த்து போட்டி
சிறையில் இருந்த போது 70 புத்தகங்களை படித்தேன். சிறையிவ் உள்ள எனக்கு ஏதேனும் உதவிகள் தேவை என்றால் செய்ய தயாராக இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். நான் சினிமாவுக்கும் வரலாம், அரசியலுக்கும் வரலாம். சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதிக்கு எதிராக போட்டியிடலாம். அதிமுக எனக்கு ஆதரவு அளிக்கலாம். அதிமுக வென்றால் எனக்கு பாஜகவும் நாம் தமிழரும் ஆதரவளிக்கும். அப்போது உதயநிதியால் எப்படி வெற்றி பெற முடியும்?

சேப்பாக்கத்திற்கு பதில் திருவாரூர்
அவர் சேப்பாக்கத்திற்கு பதில் திருவாரூரில் போட்டியிட்டால் நான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். திருவள்ளூரில் போட்டியிட்டாலும் நானும் அங்கு போட்டியிடுவேன். திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்பினேன். அதற்காக அவர் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் என்னால் ஆதரவு அளிக்க முடியாது என சவுக்கு சங்கர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications