விசிட்டர்களை பார்க்க கூடாது.. சிறை நிர்வாகம் கட்டுப்பாடு.. உண்ணாவிரதத்தில் குதித்த சவுக்கு சங்கர்!
சென்னை: கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சவுக்கு சங்கர் இன்று காலையில் இருந்து உண்ணாவிரதம் இருப்பதாக கூறப்படுகிறது.
லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வந்தவர் சங்கர். அவர் லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்த காலத்தில் அரசு ஆவணங்களை கசியவிட்டதாகவும், போன் உரையாடல்களை கசியவிட்டதாகவும் புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதோடு 2008ல் இவருக்கு எதிராக வழக்கும் பதியப்பட்டது.
சவுக்கு சங்கரை பார்க்க ஒரு மாதம் தடை.. காரணம் இதுதான்.. கடலூர் சிறை நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு
சவுக்கு ஆன்லைன்
இந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாததால், அவர் சஸ்பெண்ட் என்ற நிலையில் மட்டுமே இருந்தார். இதனால் அவருக்கு மாதம் 40 ஆயிரம் ரூபாய்க்கு அரசு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சவுக்கு ஆன்லைன் என்ற பக்கத்தை தொடங்கி இவர் அரசியல் ரீதியாக விமர்சனங்களை வைத்து வந்தார். அரசியல் ரீதியாக சில கடுமையான கருத்துக்களையும் பேசி வந்தார். சில யூ டியூப் சேனல்களிலும் பேசி வந்தார்.
நீதிபதி ஜி. ஆர் சுவாமிநாதன்
இந்த நிலையில்தான் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இவர் கடுமையான விமர்சனங்கள் சிலவற்றை வைத்தார். தீர்ப்பை விமர்சனம் செய்தது மட்டுமின்றி தனிப்பட்ட வகையில் நீதிபதி ஒருவரையும் விமர்சனம் செய்து பேசி இருந்தார். இதையடுத்து மதுரை உயர் நீதிமன்றத்தில், இவருக்கு எதிராக நீதிபதி ஜி. ஆர் சுவாமிநாதன் தாமாக முன் வந்து அவமதிப்பு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் சவுக்கு சங்கர் மன்னிப்பு கேட்க மறுத்தார்.
சவுக்கு சங்கர்
இந்த வழக்கு நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதான் சவுக்கு சங்கருக்கு எப்படி அரசு சம்பளம் வழங்கி வருகிறது என்ற கேள்வியை நீதிபதிகள் எழுப்பினர்.
நீக்கம்
அதோடு அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதையடுத்து அவரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டனர். ஆனால் இதற்கான ஆர்டரை கோர்டில் சவுக்கு சங்கர் வாங்க மறுத்தார். இந்த நிலையில் சவுக்கு சங்கர் பார்வையாளர்களை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு இவர் தனிமை சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சவுக்கு சங்கர் இன்று காலையில் இருந்து உண்ணாவிரதம் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று இரவே உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து இன்று காலையில் இருந்து உண்ணாவிரதம் இருப்பதாக கூறப்படுகிறது.