வீட்டு கடனை வெளி முதலீட்டாளர்களுக்கு விற்று பணம் பார்க்கும் SBI.. ஏன் இந்த முடிவு? பின்னணி என்ன?
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), சுமார் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான வீட்டு கடன் போர்ட்ஃபோலியோவில் ஒரு பகுதியை பத்திரமாக்கி வெளி முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய தீவிரமாக பரிசீலித்து வருவதை எஸ்பிஐ தலைவர் சி.எஸ்.செட்டி உறுதி செய்தார்.
ஏன் இந்த முடிவு..? இதனால் மக்கள் வாங்கிய வீட்டு கடனுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுக்குறித்து முழுமையாக பார்ப்போம்.

ஏன் இந்த முடிவு?
கடந்த சில ஆண்டுகளாக அனைத்து இந்திய வங்கிகளில் கடன் வளர்ச்சி, வைப்பு நிதி வளர்ச்சியை விட அதிகமாக இருந்து வருகிறது. எஸ்பிஐ வங்கியின் கடன் வளர்ச்சி 2026 ஆம் நிதியாண்டில் 16.9% ஆக இருந்தது. ஆனால் வைப்பு நிதி வளர்ச்சி வெறும் 11% மட்டுமே. வைப்பு நிதி தான் வங்கிகளுக்கு மிகப்பெரிய நிதி ஆதாரமாக விளங்கி வருகிறது, ஆனால் தற்போது இந்த ஆதாரம் குறையும் காரணத்தால் வங்கிகள் புதிய வழிகளில் நிதியை திரட்ட இறங்கியுள்ளது.
உதாரணமாக, எஸ்பிஐ வங்கி 20 ஆண்டு வீட்டுக் கடன் கொடுக்கும்போது, அந்தப் பணம் நீண்ட காலத்துக்கு வங்கியின் இருப்புநிலைக் கணக்கில் இருக்கும். இதனால் புதிய கடன்களுக்கு நிதி குறைவாகக் கிடைக்கும். இந்த நிலையை சமாளிக்க, வீட்டுக் கடன்களை தொகுப்பாக வெளி முதலீட்டாளர்களுக்கு பத்திர வடிவில் விற்பனை செய்ய எஸ்பிஐ திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் ஏற்கனவே இருக்கும் வீட்டு கடனை ஆதாரமாக வைத்து புதிய முதலீட்டை திரட்ட முடியும். இதனால் வங்கிக்கும், மக்களுக்கும் உண்டான தொடர்பும், உரிமையும் எவ்விதமான மாற்றமும் இருக்காது. ஆனால் வங்கிகள் மக்களின் சொத்துக்களை பயன்படுத்தி பத்திரமாக வெளியிட்டு நிதி ஆதாரத்தை திரட்டுகிறது.
செக்யூரிடைசேஷன் என்றால் என்ன?
வங்கி தனது வீட்டுக் கடன்களை தொகுத்து, அதன் அடிப்படையில் பத்திரங்களை உருவாக்கி, ஓய்வூதிய நிதிகள், காப்பீட்டு நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற நீண்டகால முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும். இதன் மூலம் வங்கிக்கு உடனடியாக பணம் கிடைக்கும். அந்தப் பணத்தை மீண்டும் புதிய வீட்டுக் கடன்களாக வழங்க முடியும்.
இந்தியாவில் இந்த முறை இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. கடந்த ஆண்டு தான் முதல் முறையாக வீட்டுக் கடன் அடிப்படையிலான பத்திரம் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் வெளியிடப்பட்டது. எல்ஐசி ஹவுசிங் இன்சூரன்ஸ் வெளியிட்ட இந்த பத்திரம் முழுமையாக விற்பனையானது. இந்த பத்திரத்திற்கு AAA ரேட்டிங் கொடுக்கப்பட்டது.
ஆதாவது இந்த பத்திரத்தில் சேரக்கப்பட்ட வீட்டுக் கடன்கள் அனைத்தும் பாதுகாப்பான வீட்டுக்கடன்கள் என்பது பொருள். உதாரணமாக 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் கொடுத்திருக்கும் கடன்கள், கடன் வாங்கியவர்கள் சிறப்பான கிரெடிட் ஸ்கோர் உள்ள கடன்கள், இப்படி கடனுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லாத கடன்களை ஒருங்கிணைத்து பத்திரமாக விற்கப்பட்டு உள்ளது.
இதனால் என்ன பயன்?
இந்த முறை இந்தியாவில் வளர்ந்தால், வீட்டுக் கடனுக்கு அதிக நிதி கிடைக்கும். வங்கிகள் வைப்பு நிதியை மட்டும் நம்பி இருக்க வேண்டிய அவசியம் குறையும். இதனால் வீட்டுக் கடன் வட்டி விகிதம் கட்டுப்பாட்டில் இருக்கும் வாய்ப்பு உள்ளது. சொல்லப்போனால் குறைவான வட்டியில் கூட வீட்டுக் கடன் வழங்கலாம்.
தற்போது இந்தியாவில் பெரும்பாலான வீட்டுக் கடன்கள் வைப்பு நிதியால் மட்டுமே நிதியளிக்கப்படுகின்றன. வைப்பு நிதி வளர்ச்சி குறைந்தால், கடன் வட்டி அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எஸ்பிஐ இந்த புதிய முறையை அமல்படுத்தினால், அது இந்திய வங்கித் துறைக்கு ஒரு முக்கிய மாற்றமாக அமையும்.
இந்த திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் எஸ்பிஐ தலைவர் சி.எஸ்.செட்டி இதை தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications