ஓபிஎஸ் கட்சியிலேயே இல்லை.. கேள்விக்குறியான 1000+ பேரின் நிலைமை.. என்னாகும் எதிர்காலம்?
ஓ.பன்னீர்செல்வம் நியமித்து வந்த ஆயிரக்கணக்கான நிர்வாகிகளின் பதவிகளும் செல்லாமல் ஆகிவிடும்.
சென்னை : உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி தீர்ப்பால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தொடர்கிறார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக உருவெடுத்துள்ளதால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதேசமயம், ஓபிஎஸ் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11-ல் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடர்கிறார். கட்சி மற்றும் கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் செல்லும்.

மேலும், ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதன் மூலம், அவர் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வம் நியமித்து வந்த ஆயிரக்கணக்கான நிர்வாகிகளின் பதவிகளும் செல்லாமல் ஆகிவிடுகிறது. இதனால், அரசியல் களத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் நிலை மிகப்பெரிய கேள்விகுறியாகியுள்ளது.
மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று, எடப்பாடி பழனிசாமி தரப்பை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரிக்கக் கூடும். இதனால், கட்சி முழுமையாக ஓபிஎஸ் கையை விட்டுச் செல்லக்கூடும்.
ஏற்கனவே, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின் படி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈபிஎஸ் அணி அறிவித்த வேட்பாளரே இரட்டை இலை சின்னத்தில் களத்தில் நிற்கிறார். அவருக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று தேர்தல் ஆணையமே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications