நாளை இந்த 4 மாவட்டங்களில் தனியார் பள்ளிகளை திறக்கக்கூடாது! பள்ளி கல்வித்துறை ஸ்ட்ரிட் ஆர்டர்
சென்னை: புயல் மழையால் பள்ளி கட்டிடங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை சீர் செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் நாளை(டிச.09) சென்னை உட்பட 4 மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் திறக்கப்படக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 4ம் தேதியன்று ஒரே நாளில் 40 செ.மீ அளவுக்கு மழை கொட்டி தீர்த்திருக்கிறது. சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 100 மிமீ முதல் 1100 மி.மீதான். ஆனால் இதில் மூன்றில் ஒரு பகுதி மழை கடந்த 4ம் தேதி பெய்திருக்கிறது. எனவே சென்னை முழுவதும் வெள்ள காடாக மாறியிருக்கிறது. மழை ஓய்ந்து 4 நாட்கள் ஆன பின்னரும் சென்னையில் சில பகுதிகளில் வெள்ளம் இன்னும் வடியவில்லை.

மற்ற மாவட்டங்களின் நிலை: சென்னை தவிர காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் புயல் மழை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சென்னை உட்பட நான்கு மாவட்டங்களிலும் நாளை 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றன.
பள்ளிகளின் நிலை: நான்கு மாவட்டங்களிலும் உள்ள பள்ளி வளாகம் மற்றும் மைதானங்களில் மழை இன்னும் தேங்கியிருக்கிறது. மட்டுமல்லாது மழை காரணமாக பள்ளியின் கூரைகள் சேதமடைந்துள்ளன. பல பள்ளிகளில் மரங்கள் சாய்ந்திருக்கிறது. மின்சார விநியோகத்திலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் இதனை சீர் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. எனவே டிச.11ம் தேதி வரை 4 மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நிதி ஒதுக்கீடு: ஆனால் சில தனியார் பள்ளிகள் மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. எனவே நாளை(டிச.9) 4 மாவட்டங்களிலும் தனியார் பள்ளிகள் திறக்கப்படக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. மறுபுறம் அரசு பள்ளிகள் புயல் மழையிலிருந்து மீள, ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு தலா ரூ.25 லட்சம் என பிரித்து வழங்கப்படும்.
இந்த நிதியை கொண்டு பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளையும், அறைகளையும் தூய்மைப்படுத்த வேண்டும். பள்ளி வளாகம் முழுமையாக தூய்மை செய்து, வளாகத்தில் உள்ள முட்புதர்களை அகற்றிட வேண்டும். பள்ளிகளின் சுற்றுச்சுவர்கள் மிகுந்த ஈரப்பதத்துடன் இருக்கலாம், எனவே மாணவர்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications