ஆசிரியர்கள் இப்படி பண்ணலாமா? கடிவாளம் போடும் பள்ளிக் கல்வித்துறை.. பறந்தது அதிரடி உத்தரவு!
சென்னை: பள்ளிக்கு சரியாக வராமல் வேறொரு ஆசிரியர் மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது தமிழக அரசின் கல்வித்துறை. தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரே ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் நிலை, கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கிறது? நலத்திட்டங்கள் முறையாக மாணவர்களைச் சென்றடைகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். அப்போது, ஆசிரியர்கள் தாமதமாக வகுப்புகளுக்கு வருவதும், மாலை பள்ளி முடிவதற்கு முன்பே சில ஆசிரியர்கள் புறப்பட்டுச் செல்வதும் தெரியவந்துள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட ராமியாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கே.பாலாஜி பணிக்கு வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பியது ஆய்வில் தெரியவந்தது. இதனையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியை நாகலட்சுமி, வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் ஆசிரியர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல், தமிழகம் முழுவதும் பல ஆசிரியர்கள் பணிக்கு முறையாக வருவதில்லை எனவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து பள்ளிக்கு சரியாக வராத ஆசிரியர்களை கண்டறிந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், “பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலனை காக்க வேண்டியது நமது பொறுப்பு. அதன்படி பள்ளியில் ஆய்வு செய்யும் போது ஆசிரியர்கள் பணிக்கு வராமல் வேறு நபர் மூலம் பாடம் நடத்துவது கண்டறியப்பட்டால் அல்லது அதுசார்ந்த புகார்கள் பெறப்பட்டால் அதன் மீது தனிக் கவனம் செலுத்தி விசாரணை நடத்த வேண்டும்.
விசாரணையில், குற்றச்சாட்டில் உண்மை இருப்பின் மாவட்டக் கல்வி அலுவலரே ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம். மேலும், பள்ளியில் இத்தகைய தவறுகள் நடைபெறும் போது அதன் விவரத்தை உயர் அதிகாரிகளுக்கு வழங்க தவறும் பட்சத்தில் தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மீதும் துறை சார்ந்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications