கொடி கட்டும் போது ஷாக்கடித்து சிறுவன் பலி.. பொன்முடி மீது நடவடிக்கை எடுங்கள்: ஜெயக்குமார் காட்டம்
சென்னை: திமுக கொடி நட்ட போது ஷாக் அடித்து பலியான சிறுவன் தினேஷின் மரணத்திற்கு அமைச்சர் பொன்முடி பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் தினேஷ் என்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கி உள்ளது. அமைச்சர் பொன்முடி கலந்து கொண்ட திருமண விழா ஒன்றுக்கு கொடி நட்ட போது, அங்கே சென்ற மின்சார வயரில் கொடி பட்டு தினேஷ் பலியானார்.
உயர் மின் அழுத்த கம்பிகள் அந்த வழியாக சென்ற நிலையில், தினேஷ் நட்ட கொடி மின்சார வயதில் உரசி தினேஷ் தூக்கியடிக்கப்பட்டார். இதில் தினேஷ் தலை உட்பட பல இடங்களில் மோசமாக காயம் ஏற்பட்டது.

மருத்துவமனை
இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தினேஷ் சிகிச்சை பலனின்றி பலியானார். தமிழ்நாட்டில் மீண்டும் பேனர் மற்றும் அரசியல் அலங்கார கலாச்சாரத்தால் உயிர் பலி ஏற்பட்டு இருப்பது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. கடந்த 2019ல் சென்னையில் அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் 23 வயது இளம்பெண் சுபஸ்ரீ பலியானார். அப்போதே பேனர் மற்றும் கொடி வைக்கும் கலாச்சாரம் பெரிய விமர்சனங்களை சந்தித்த நிலையில் தற்போது தினேஷ் மரணமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினேஷ் மரணம்
தினேஷ் மரணம் தொடர்பாக போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதில் யாருக்கு எதிராகவும் வழக்கு பதியப்படவில்லை. அதோடு இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் சிறுவன் உயிரிழப்பிற்கு அமைச்சர் பொன்முடி பொறுப்பேற்க வேண்டுமென்றும் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பேட்டி
இது தொடர்பாக ஜெயக்குமார் அளித்துள்ள பேட்டியில், சிறுவன் தினேஷ் மரணம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய முறையில் விசாரிக்க வேண்டும். அமைச்சர் பொன்முடியை வரவேற்பதற்காக கொடி நட்ட போதுதான் இந்த சம்பவம் நடைபெற்றது. இதனால் அந்த சம்பவத்திற்கு அவர் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புகார்
அவர்தான் அமைச்சர் என்ற முறையில் இந்த மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சிறுவன் தினேஷின் மரணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். 13 வயதான தினேஷை இழந்து வாடும் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வதெனத் தெரியவில்லை. தினேஷை இழந்து தவிக்கும் குடும்பத்தாரின் துயரில் பங்கேற்று துணைநிற்கிறேன், என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications