நாங்குநேரி சின்னதுரை மட்டுமில்ல.. தீண்டாமை தீ மூட்டும் டீச்சர்கள்! சாதி பாகுபாடு பார்க்கும் பள்ளிகள்
சென்னை: நாங்குநேரி மாணவன் சின்னதுரைக்கு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தமிழ்நாடு பள்ளிகளில் கடந்த ஓராண்டில் ஏராளமான சாதி வெறி கொடூரங்கள் அரங்கேறி இருக்கின்றன.
கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டை உலுக்கியது நாங்குநேரியில் அரங்கேறிய சாதிவெறி கொடூரம். நாங்குநேரி குறித்த பதிவுகளும், கண்டனங்களும், சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான உத்தரவுகளும் தொடர்ந்து வருகின்றன. நாங்குநேரியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவன் சின்னதுரைக்கும், அவனது தங்கை மற்றும் தாத்தாவுக்கு அரங்கேறிய துயரம் பரியேறும் பெருமாள், அசுரன், கர்ணன், ஜெய்பீம், மாமன்னன் படங்களை விட கொடூரமானது.

நாங்குநேரி அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு டாப் மாணவன் யார் என்றால் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு செல்வது சின்னதுரை என்ற பெயர். பெயர் சின்னதுரை என்று இருந்தால் படிப்பில் ஆள் பெரியதுரை. ஆனால், இந்த கேடுகெட்ட சாதிய சமூகம் சின்னதுரையை பிறப்பால் தாழ்த்தப்பட்டவனாகவே பாவித்து ஒடுக்கி வருகிறது.
இந்த சாதிய மனோபாவத்தை சின்னதுரை வயதுடைய பள்ளி மாணவர்களிடமும் இச்சமூகம் கடத்தி அவர்களை வெறியர்களாக்கி இருக்கிறது. சின்னதுரை நன்றாக படிப்பதை பொருத்துக்கொள்ள முடியாமல் அவரை சாதி ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்கள் ஆண்ட சாதி என்று அலட்டிக்கொள்ளும் சமூகங்களை சேர்ந்த சக மாணவர்கள்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சின்னதுரை இது பற்றி தலைமை ஆசிரியரிடம் புகாரளிக்க அவர், அந்த மாணவர்களை அழைத்து கண்டித்துள்ளார். எங்கள் மீதே புகாரளிப்பாயா என்று வெறிகொண்ட 6 மாணவர்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சின்னதுரையின் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். தடுக்க வந்த சின்னதுரையின் 13 வயது தங்கைக்கும் தாறுமாறாக வெட்டு விழுந்துள்ளது.
சின்னதுரை வீட்டில் இருந்த 55 வயது முதியவரும் இதனை தடுக்க முயன்று தள்ளிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மாரடைப்பில் உயிரிழந்துள்ளார். இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளார்.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் சின்னதுரையையும் அவரது சகோதரியையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். இதேபோல்தான் இதற்கு முன் ஒவ்வொரு சம்பவத்தின்போது விசயம் பெரிதாகி நடவடிக்கைக்கு உத்தரவிடுகிறார்கள். ஆனால், மீண்டும் சில மாதங்களில் அதேபோன்ற சம்பவம் அரங்கேறி விடுகிறது.
நாங்குநேரி சம்பவத்திலாவது தலைமை ஆசிரியர் தலித் மாணவனின் புகாரை செவி சாய்த்து கண்டித்து உள்ளார். ஆனால், பல பள்ளிகளில் ஆசிரியர்களே சாதி வெறியுடன் நடந்துக்கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. கடந்த ஆண்டு தென்காசி மாவட்டம் பாஞ்சாங்குளத்தில் பட்டியலின மாணவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து பெட்டிக் கடையில் திண்பண்டம் கூட வழங்காத முடியாத கொடூரம் மாநிலத்தையே உலுக்கியது.
சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ் துறை பேராசிரியை அனுராதா மாணவர் ஒருவரிடம், "கல்லூரிக்கு வரும் மாணவர்களின் முகத்தை பார்த்தாலே BCயா, MBCயா, SCயா என்று தெரிந்துவிடும். நீ என்ன சாதி என்று எனக்கு தெரியாது. நீ என்ன சாதி?" என செல்போனில் கேட்கும் ஆடியோ வெளியாகி பலரை அதிர வைத்தது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில், அரசுப்பள்ளி மாணவனிடம் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி பட்டியல் சமுதாய ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எதிராக மாணவனை தூண்டிவிடும் வகையில் பேசியபோது, மாணவன் முனீஸ்வரன் "எல்லோரும் சமம்தானே டீச்சர்" என்று பதிலடி கொடுத்தார். அந்த ஆடியோவும் வெளியானது.
கடந்த வாரம் விழுப்புரம் கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 தலித் மாணவர்களை சாதிய தீண்டாமை உள்நோக்கத்துடன் திட்டமிட்டு நிறுத்தியுள்ளதாக தலைமை ஆசிரியர் திரு.ஜெயசீலன் & கணினி ஆசிரியர் குரு மீது பெற்றோர் முதலமைச்சருக்கு புகார் கடிதம் எழுதினார். தனது மகன் ஜான் திலிப் டிசில்வாவிடம் தேர்வுக்கட்டணம் ரூ.305 பெற்றும் தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்காத நிலையில், இதுபற்றி கேட்டபோது ஆசிரியர் தாக்கி டிசி பெற்றுக்கொண்டு செல்லுமாறு மிரட்டியதாக அவர் அதில் குறிப்பிட்டார்.
இவையெல்லாம் வெளியில் தெரிந்த சம்பவங்கள். வெளியில் தெரியாமல் இதைவிட பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதையெல்லாம் தடுப்பதற்கு ஒரே தீர்வு பள்ளியில் அறிவியல், கணக்கு பாடங்களை போதிப்பதற்கு இணையாக சமூக நீதி உணர்வை ஊட்டும் வகையிலான பாடங்களை போதித்து அதற்கு மதிப்பெண்ணிலும் முக்கியத்துவம் அளித்திட வேண்டும்.












Click it and Unblock the Notifications