வெடிகுண்டு மிரட்டல் விடுக்காத சென்னை தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை.. குழப்பத்தில் பெற்றோர்
சென்னை: சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படாத பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளதால் பெற்றோர் மத்தியில் குழப்பமான சூழல் நிலவுகிறது.
சென்னையில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பள்ளிகளின் இமெயில் முகவரிக்கு வந்த தகவலில் உங்கள் பள்ளியில் சக்தி வாய்ந்த இரு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியை சாதாரணமாக எடுத்துக் கொண்டால் பள்ளி வெடித்துச் சிதறிவிடும் என்றும் அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து பதறிய பள்ளி நிர்வாகத்தினர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை அவர்களாகவே வீடுகளுக்கு செல்ல அனுப்பிவிட்டார்கள். அதற்கு கீழ் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களை தனியாக அனுப்ப முடியாது என்பதால் அவர்களின் பெற்றோருக்கு எஸ்எம்எஸ், வாட்ஸ் ஆப், போன் மூலம் தகவல் தெரிவித்து பள்ளிகளுக்கு விடுமுறை உடனே வந்து அழைத்துச் செல்லுங்கள் என்று மட்டும் சொல்லியுள்ளனர்.
இதனால் பதறி அடித்துக் கொண்டு பெற்றோர் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்றுள்ளனர். இதனால் ஆங்காங்கே 1 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் சூழ்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல பெற்றோர் ஆட்டோ, கார்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஓடுகிறார்.
அங்கு ஒரு இடத்தில் பிள்ளைகளை பள்ளி நிர்வாகத்தினர் பாதுகாப்பாக வைத்துள்ளனர். அங்கு அவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து 12.30 மணி முதல் செய்திகளில் வந்த வண்ணம் இருப்பதால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படாத பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர். அவர்களிடம் வெடிகுண்டு மிரட்டல் விவகாரத்தை ஏதும் கூறாமல் பள்ளிக்கு அரை வேளை விடுமுறை உங்கள் பிள்ளையை அழைத்து செல்லுங்கள் என்று மட்டும் கூறிய நிலையில் செய்தி சேனல்களில் வெளியான தகவலை வைத்துதான் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளுக்கு விரைந்துள்ளனர். சில பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பிவிட்டு புறநகர்களில் வேலைக்கு சென்றுவிட்டார்கள். இதனால் அவர்கள் பிள்ளைகளை எப்படி அழைத்து செல்வது என்ற குழப்பத்தில் உள்ளனர். சிறுச்சேரி, பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரவே 1 மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்பதால் அவர்கள் செய்வதறியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பெங்களூரில் கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து பெற்றோர்களுக்கு உண்மையான காரணத்தை சொல்லாமலேயே அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications