ஊருக்கு ஒரு விஞ்ஞானி... இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் சயின்ஸ் பஜார்
சென்னை: ஊருக்கு ஒரு விஞ்ஞானிகளை உருவாக்கவேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வரும் சயின்ஸ் பஜார் அமைப்பு சார்பாக சென்னையில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.
சென்னை பூந்தமல்லியில் உள்ள பனிமலர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் கருத்தரங்கில் அமெரிக்கா, ரஷ்யா, லண்டன் ஆகிய நாடுகளை சேர்ந்த பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை உலகிற்கு பறை சாற்றும் பொருட்டு புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தார்கள்.
ஊக்குவிப்பு
உலக மனிதாபிமான இயக்கம் (world humanatarian drive) சார்பாக நடத்தப்படும் சயின்ஸ் பஜார் அமைப்பு லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இதன் மண்டல அலுவலகங்கள் கொரியா மற்றும் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் என்பது, புதிய கண்டுபிடிப்புகளை கண்டறியும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதுடன் அவர்களின் கண்டுபிடிப்புகளை உலகறியச் செய்யும் வகையில் அதற்கான வழிகாட்டியாக திகழ்வதும் ஆகும்.
தேடி தேடி
உலகிற்கு பயனுள்ள எந்த ஒரு புதிய பொருட்களை யார் உருவாக்கினாலும், அவர்களை தேடி சென்று சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது சயின்ஸ் பஜார். மேலும், அந்த பொருட்களுக்கு காப்புரிமை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகள், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பணிகளை சர்வதேச அளவில் இந்த இயக்கம் செய்து வருகிறது. இது வரை பல நூறுக்கும் மேற்பட்ட இளம் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்து அவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு பக்கபலமாக இருந்து வருகிறது சயின்ஸ் பஜார்.
அறிவியல்
மாணவர்களுக்கு அறிவியல் மீது ஆர்வம் ஏற்படும் வகையில் அவ்வப்போது சர்வதேச அளவிலான போட்டிகளையும் சயின்ஸ் பஜார் நடத்தி வருகிறது. இதன் மூலம் அறிவியல் மீதும், புதிய தேடுதல் மீதும் பள்ளி மாணவர்களுக்கு நாட்டம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே உங்களில் யாரேனும் அல்லது உங்கள் சுற்றத்தில் யாரேனும் புதிய தேடுதலில் ஆர்வம் மிகுந்தவர்களாக இருந்தால் சயின்ஸ் பஜார் இணையத்தில் விண்ணப்பித்து அந்த அமைப்பின் வழிகாட்டுதலோடு உங்கள் முயற்சிகளை தொடங்கலாம்.
நம்பிக்கை
மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், அவர்களின் வாழ்வியலுக்கு உதவிடும் வகையில் புதிய பொருட்களை யாரேனும் வடிவமைத்தால் அதனை சயின்ஸ் பஜார் மனதார வரவேற்பதாக கூறுகிறார் அந்த அமைப்பின் தலைவர் அப்துல் பாசித் சையது. இவரது பூர்வீகம் தமிழகமாக இருந்தாலும், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக லண்டனில் வசித்து வருகிறார். ஸ்பேஸ் கிட்ஸ் போன்ற அறிவியல் துறை சார்ந்த அமைப்புகளோடு இணைந்து இன்னும் பல புதிய ஆராச்சியாளர்களை உருவாக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்கிறார் அப்துல் பாசித் சையது.