CAA சட்டத்துக்கு எதிராக எஸ்டிபிஐ.. கொந்தளிப்பான சூழல்.. உஷார் படுத்தப்படும் போலீசார்!
சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக எஸ்டிபிஐ கட்சி போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2019 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் சிஏஏ சட்ட அறிவிக்கையை வெளியிட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சிஏஏ சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன். கொரோனா தொற்று காரணமாக போராட்டங்கள் ஓய்ந்திருந்தன.

சட்டம் நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில், அதனை மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால், மீண்டும் நாடு முழுவதும் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
சிஏஏ சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதிமுக கூட்டணியில் இருக்கும் எஸ்டிபிஐ கட்சி, சிஏஏ சட்டம் அமலுக்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மத்திய பாஜக அரசின் மதவாத சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என அக்கட்சித் தலைவர் நெல்லை முபாரக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், "குடியுரிமை திருத்தச் சட்டம் (2019) இன்று முதல் அமல்படுத்தப்படுவதாக ஒன்றிய பாஜக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை SDPI கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த சட்டத்தை ஒருபோதும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தேர்தல் தோல்வி பயம் காரணமாகவும், உச்ச நீதிமன்றத்தால் தேர்தல் நிதி பத்திரம் வழியான முறைகேடு அம்பலப்பட்ட காரணத்தாலும், மக்களை பிளவுபடுத்தி நாட்டில் அமைதியற்ற சூழலை உருவாக்கவும், தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நேரத்தில் பாஜக அரசு இந்த அறிவிப்பை வேளியிட்டுள்ளது.
நாட்டின் பூர்வகுடி மக்களான முஸ்லீம் மக்களுக்கு எதிரான பாரபட்சம் கொண்ட இந்த சிஏஏ சட்டத்தை எஸ்டிபிஐ கட்சி தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறது. சிஏஏ சட்டத்தை அமல் படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி இன்றும், என்றும் போராடும், களம் காணும்" எனத் தெரிவித்துள்ளார்.
சிஏஏ சட்டம் அமலானதை தொடர்ந்து, எஸ்டிபிஐ கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, சிஏஏ சட்டத்தை எதிர்க்கிறது எஸ்டிபிஐ என்றும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications