அறிவுத் திருட்டு.. மணவை முஸ்தபா நூல்களை திருடி அப்பட்டமாக முறைகேடு.. எஸ்டிபிஐ குற்றச்சாட்டு
சென்னை: தமிழ் அறிவியல் கலைச் சொற்களை உருவாக்கிய கலைமாமணி மணவை முஸ்தபாவின் அரசுடமையாக்கப்பட்ட நூல்களின் பெயர்களை மாற்றி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், எனவே இதனை தடுக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "அறிவியல் தமிழ் வளர்ச்சிக்காக அறிவியல் கலைச் சொற்களை உருவாக்கிய 'அறிவியல் தமிழ்த்தந்தை' என்றழைக்கப்படும், மறைந்த கலைமாமணி மணவை முஸ்தபா அவர்களின் அரசுடமை ஆக்கப்பட்ட நூல்களை, வேறு ஒருவர் பெயரில், சில உள்ளடக்க வார்த்தைகளை மாற்றி, அந்த நூல்களை அரசு நூலகங்களுக்கு அச்சடித்து விற்பனை செய்து பதிப்பகங்கள் முறைகேடு செய்துள்ளதாக மணவை முஸ்தபா அவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தர உலகஅளவில் நிர்ப்பந்தம் கொடுத்த பல போராளிகளில் மறைந்த கலைமாமணி தமிழ் சிற்பி மணவை முஸ்தபா அவர்களும் ஒருவராவார். மணவை முஸ்தபா அவர்களின் அறிவியல் தமிழ்க் கலைச் சொற்கள் தான் தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைப்பதில் முக்கிய பங்காற்றியது. அறிவியல் தமிழ் வளர்ச்சிக்காக, ஏறத்தாழ பத்து லட்சம் அறிவியல் தமிழ்க் கலைச் சொற்களை தனது வாழ்நாள் முழுவதும் முயன்று அவர் உருவாக்கினார்.
அவரது செழுமையான கடின உழைப்பால் உருவான சொற்களை கலைக் களஞ்சியங்களாக அவரது காலத்திலேயே, கடுமையான பொருளாதார சிரமத்திலும் மாபெரும் அளவுகளைக் கொண்ட பெரும் நூல்களாக தமிழுக்கு பெருமை சேர்க்கும் நிலையில் வெளியிட்டார். மணவை முஸ்தபா அவர்களின் நூல்கள் தமிழக அரசின் பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளன. அவரது நூல்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசால் அரசுடமை ஆக்கப்பட்டன. அந்த நூல்கள் இணையத்தில் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன. ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பெரும் பணியை, தனியொரு மனிதனாக அவர் சாதித்து முடித்தார்.
தமிழின் அறிவியலுக்கு அவர் தந்த 'மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்', 'அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி' ஆகிய இரு பிரம்மாண்ட படைப்புகளை துணையாகக் கொண்டே கடந்த 25 ஆண்டுகளாகப் பள்ளிக் கல்வித் துறையின் தமிழ்ப் பயிற்று மொழி சார்ந்த ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான நூல்களை ஆசிரியர்கள் உருவாக்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. 'கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி'யும் அவரது அபார உழைப்பில் விளைந்த ஒரு பொக்கிஷ நூலாகும்.
இந்த நிலையில், மணவை முஸ்தபா அவர்களின் உழைப்பில் விளைந்த 'கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி' நூலை, பெ.மயிலவேலன் என்பவர் தனது பெயரில் மாற்றி, அந்த நூலை தமிழக நூலகங்களில் முறைகேடாக விற்பனை செய்துள்ளதாக மணவை முஸ்தபா அவர்களின் மகன் பேராசிரியர் மருத்துவர் செம்மல் முஸ்தபா குற்றம் சாட்டியுள்ளார்.
மணவை முஸ்தபா தன் கூரிய அறிவாலும், கடின உழைப்பாலும் உருவாக்கிய அந்த அருமையான அகராதி நூலின் உள்ளடக்கத்தில், இடையிடையே சில, பல சொற்களை மட்டும் நீக்கி விட்டு, நூலின் ஆய்வுரை உட்பட மற்றவற்றை அப்படியே நகல் எடுத்து, அதைத் தனது நூல் போல மயிலவேலன் மாற்றியுள்ளதாகவும், அந்த நூல் நூற்றுக்கணக்கான அரசு நூலகங்களில் அரசால் வாங்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு நல்ல நூலை அரசுடமை ஆக்குவதன் நோக்கமே அந்த நூல் அனைவரையும் சென்று சேர வேண்டும் என்பதுதான். ஆனால், ஆசிரியரின் அடையாளத்தை முற்றிலுமாக அழித்தொழித்து, ஆசிரியரின் வாழ்நாள் உழைப்பை இல்லாமல் ஆக்குவது மாபெரும் குற்றமாகும்.
அரசுடைமை நூல்கள் அரசுக்குச் சொந்தமானவை அவற்றை உரிய சட்ட திட்டங்களின் அடிப்படையில் யார் வேண்டுமானாலும் பதிப்பித்து உலகின் தொடர் பயன்பாட்டிற்குக் கொண்டுவர முடியும். ஆனால், ஆசிரியரின் பெயரையே அகற்றிவிட்டு யாரோ ஒருவரின் பெயரில் அவற்றை வெளியிடுவது என்பதும் அவற்றை எவ்வித அச்சமும் இன்றி அரசின் நூலகங்களுக்கே விற்பனை செய்வது கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி, இந்த செயல் மாபெரும் முறைகேடு குற்றமாகும். அரசின் உடமையாக இருக்கும் என்றெண்ணி அரசின் மீது நம்பிக்கை வைத்து ஆளுமைகளால் வழங்கப்பட்ட நூல்களின் ஆசிரியர் பெயரை முழுவதுமாக நீக்கி, பொய்யான ஆசிரியர் பெயரை எழுதி, படைப்பாளியின் உழைப்பை வரலாற்றில் அழித்தொழிக்கும் மாபெரும் அநீதியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அதிகாரிகளின் உதவியில்லாமல் இத்தகைய முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பில்லை என்கிற மருத்துவர் செம்மல் முஸ்தபா அவர்களின் குற்றச்சாட்டு நியாயமானதாகும்.
மணவை முஸ்தபா அவர்களின் நூல்களுக்கு மட்டுமல்ல, இதுபோல பல அரசுடைமை நூல்களிலும் களவாடல் முறைகேடு நடைபெற்றிருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
ஆகவே, தமிழக அரசு கூர்மையான ஆய்வுகள் செய்து, தமிழக அரசை நம்பி ஆய்வாளர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் கொடுத்த அரசுடமை நூல்களுக்குப் பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, இதுபோன்ற அறிவுக் களவாடல் நூல்களை அரசு நூலகங்களிலிருந்து அகற்றி, முறைகேடு செய்தவர்கள் மற்றும் அதற்கு துணை போனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications