ஒகேனக்கல் வனப்பகுதியில் பூர்வகுடி மக்களின் வீடுகளை தகர்த்த வனத்துறை! எஸ்டிபிஐ கண்டனம்
சென்னை: ஒகேனக்கல் வனப்பகுதியில் பூர்வகுடி மக்களின் வீடுகளை வனத்துறையினர் தகர்த்ததற்கு - எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபி கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே, எடத்திட்டு, வேப்பமரத்து கோம்பு ஆகிய வனப்பகுதியில் வசித்துவந்த பூர்வகுடி மக்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு எனக் கூறி காவல்துறையினர் உதவியுடன் வனத் துறையினர் தகர்த்துள்ளது கண்டனத்திற்குரியது.

ஐந்து தலைமுறைகளாக கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழில் செய்து அப்பகுதியில் வசித்து வந்த மக்களை, பூர்வகுடி மக்கள் இல்லை எனக்கூறி மிகவும் அராஜகமான முறையில் பெண்கள், குழந்தைகளிடம் நடந்துகொண்டதோடு, அந்த எளிய மக்களின் வீட்டு மேற்கூரைகளை வனத்துறையினர் தகர்த்துள்ளனர். இதனால் வீடுகளை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து செய்வதறியாமல் சொந்த இடத்திலேயே அகதிகள் போல் அம்மக்கள் நிற்கவைக்கப்பட்டுள்ளனர்.
மனிதாபிமானம் சிறிதுமின்றி ஏழை எளிய மக்களிடம் இதுபோன்ற அடக்குமுறைகளை கையாளும் வனத்துறை மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட பூர்வகுடி மக்களுக்கு அதே இடத்தில் மீண்டும் வீடுகளை கட்டிக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications