அதிகாலையில் வந்த ஷாக் தகவல்! மனதை கல்லாக்கி கொண்டு கட்சி மேடையேறிய நெல்லை முபாரக்! பின்னணி என்ன?
சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்கின் தாயார் ஷெரிஃபா பீவி காலமானார்.
அம்மா காலமான தகவல் தன்னை உலுக்கினாலும் கூட மனதிற்குள் சோகத்தை புதைத்துக் கொண்டு, ஆளுநருக்கு எதிரான முற்றுகைப் பேரணியில் பங்கெடுத்து விட்டுத் தான் ஊருக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார் நெல்லை முபாரக்.
பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு இது போன்ற திடமான நெஞ்சுரம் வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.

எஸ்.டி.பி.ஐ. போராட்டம்
தமிழக ஆளுநர் ரவியை திரும்பப்பெற வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. தலைமையில் சென்னையில் இன்று பிரம்மாண்ட பேரணியும் முற்றுகைப் போரட்டமும் நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்கிற்கு பாளையங்கோட்டையில் இருந்து அதிகாலையில் வந்த அலைபேசி தகவல் அவரை திடுக்கிட வைத்திருக்கிறது. அதாவது நெல்லை முபாரக்கின் தாயார் ஷெரிஃபா பீவி காலமான செய்தி அது.

திட்டமிட்டபடி பேரணி
இந்த தகவல் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் மத்தியில் பரவியது. இதையடுத்து இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த போராட்டத்தை ஒத்தி வைக்கலாமா என சிலர் ஆலோசித்துள்ளனர். ஆனால் அதனை திடமாக மறுத்த நெல்லை முபாரக், என் சோகம் என்னோடு தான் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, திட்டமிட்டப்படி ஆளுநருக்கு எதிரான போராட்டத்தை நடத்தியதோடு அதில் முதல் ஆளாக உரையாற்றிவிட்டு அங்கிருந்து பாளையங்கோட்டைக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.

இரங்கல் -ஆறுதல்
இன்று மாலை 5.30 மணிக்கு பாளையங்கோட்டையில் நெல்லை முபாரக்கின் தாயார் அடக்கம் செய்யப்படுகிறார். இதனிடையே நெல்லை முபாரக்கின் தாயார் மறைவுச் செய்தியறிந்து டிடிவி தினகரன் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கலும் ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் வரலாறு
கருணாநிதியின் தந்தை முத்துவேல் மறைந்த போது அது குறித்த தகவல் துண்டுச் சீட்டு மூலம் கிடைக்கப்பெற்றும், திமுக மாநாட்டில் தாம் ஆற்றிக் கொண்டிருந்த சொற்பொழிவை முழுமையாக முடித்து கடமையை நிறைவு செய்த பின்னரே அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றார் என்பது கடந்த கால அரசியல் வரலாறு. அதேபோன்று ஒரு நிகழ்வு தான் இன்றைய தினம் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications