ஹஜ் விமானம்... சென்னையிலிருந்து விமானம் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் -எஸ்.டி.பி.ஐ
சென்னை: சென்னையிலிருந்து ஹஜ் பயண விமானங்களை இயக்க தமிழக அரசு நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக புனித ஹஜ் பயணம் நடைபெறாத சூழலில், 2022-ம் ஆண்டில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்வதற்கான இணையதளங்களை ஒன்றிய அரசின் ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. அதேவேளையில் 2022-ஆம் ஆண்டு ஹஜ் பயணத்துக்கான விமானங்கள் புறப்படுவதற்கான இடங்கள் 21-இல் இருந்து 10 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி படி சென்னை, திருச்சி விமானநிலையங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த ஹஜ் பயணிகள் பெங்களூரு, கொச்சின் ஆகிய இடங்களிலிருந்து செல்லும் விமானங்களில் பயணிக்க வேண்டிய நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்திய பெருநகரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சென்னை விமானநிலையம் புறக்கணிக்கப்பட்டிருப்பதும், ஹஜ் பயணிகளின் சிரமங்களை கணக்கில் கொள்ளாது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கது.
கொரோனா பெருந்தொற்றுக்கிடையில் பல்வேறு நாடுகளிடையே விமானப் போக்குவரத்து துவங்கியுள்ளது. இந்தியாவிலிருந்தும் தடுப்பூசி செலுத்தி, கோவிட் சோதனை மேற்கொண்ட பின்னர் வெளிநாடுகளில் பணிபுரிவோர்கள் விமானப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, புனித ஹஜ் பயணம் அடுத்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் தான் துவங்கும் என்கிற நிலையில், கொரோனா தொற்றை காரணங்காட்டி தமிழகத்திலிருந்து ஹஜ் பயணத்துக்கான விமானங்கள் சேவை ரத்து செய்யப்படுவது ஏற்கத்தக்கதல்ல.

தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து ஹஜ் கமிட்டி மூலமாகவும், தனியார் சேவை மூலமாகவும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லும் நிலையில், அவர்கள் அனைவரும் பெங்களூர் அல்லது கொச்சி விமான நிலையங்கள் மூலமாக பயணிக்க வேண்டும் என்பது தமிழக ஹஜ் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். ஆகவே, தமிழக அரசு உடனடியாக இந்த விசயத்தில் தலையிட்டு, 2022ம் ஆண்டு ஹஜ் பயணத்துக்கான விமானங்கள் புறப்படுவதற்கான இடங்களில் சென்னை விமான நிலையத்தையும் இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications