ஜனவரி மாதம் திருப்பூரில் மாநாடு நடத்தும் எஸ்.டி.பி.ஐ.! பரந்தூர் ஏர்போர்ட் திட்டத்தை கைவிடக் கோரிக்கை
சென்னை: பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் அல்லது மாற்றி அமைக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி திருப்பூரில் பிரம்மாண்ட மாநாடு நடத்தப்படவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்ல முபாரக் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது;

எஸ்.டி.பி.ஐ. மாநாடு
''தமிழகத்தின் மூன்று முக்கியமான வாழ்வாதார கோரிக்கைகளையும் வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கொங்கு மண்டலம் சார்பாக எதிர்வரும் ஜனவரி 22, 2023 அன்று திருப்பூரில் மாபெரும் மூன்று அம்ச கோரிக்கை மாநாட்டை எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழர்களின் வாழ்வாதார கோரிக்கைக்காக நடைபெறும் இந்த மாநாட்டில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.''

ஆவின் விலை உயர்வு
''ஆவின் பால், ஐஸ்கிரீம், தயிர், நெய், வெண்ணெய் என ஆவின் பொருட்கள் ஒவ்வொன்றாக விலை உயர்ந்து வருகின்றன. இந்த விலைவாசி ஏற்றம் என்பது மிகப்பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே, தமிழக அரசு பொதுமக்களின் நலன்கருதி இத்தகைய விலைவாசி ஏற்றத்தை கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.''

பரந்தூர் விமான நிலையம்
''பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிட்டத்தட்ட 150 நாட்களாக ஏகனாபுரத்தில் 13 கிராம மக்கள் இணைந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பரந்தூர் விமான நிலையம் அமைந்தால் அது விவசாய நிலங்களை அழிப்பது மட்டுமல்லாது, பெருவெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சென்னைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற எச்சரிக்கையையும் தமிழக அரசு கவனத்தில் கொண்டு திட்டத்தை கைவிட வேண்டும் அல்லது திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.''

பொது சிவில் சட்டம்
''வெறுப்பு அரசியல், பிரிவினை அரசியல் செய்து வரும் பாஜக இப்போது பொது சிவில் சட்டத்தை பற்றி பேசத் தொடங்கியுள்ளது. பொது சிவில் சட்டம் தொடர்பான தனிநபர் மசோதாவை கொண்டுவர பாஜக காய் நகர்த்தி வருகின்றது. பாசிச சக்திகளின் பொதுசிவில் சட்ட அறைகூவலை எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டிக்கிறது. இதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இதற்கெதிராக ஜனநாயக சக்திகள் குரல் எழுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.''

ஆளுநருக்கு கண்டனம்
''ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்ட மசோதாவுக்கு ஓப்புதல் வழங்காமல், தடை செய்யப்பட்ட விளையாட்டு நிறுவனங்களின் நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்துவரும் தமிழக ஆளுநரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.தமிழக ஆளுநர் உடனடியாக தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்டத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.'' இவ்வாறு அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications